இந்திய எதிர்ப்பை மீறி ரூ.9,700 கோடியில் பிரம்மபுத்திரா குறுக்கே சீனா அணை- மின் உற்பத்தி தொடக்கம்!!
பெய்ஜிங்: இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ரூ9,700 கோடியில் பிரமாண்ட அணையை கட்டியுள்ள சீனா மின் உற்பத்தியையும் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய ஆறுகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இது சீனா வசமுள்ள திபெத்தில் யாலுச்சாங்பூ என்ற பெயரில்தான் புறப்படுகிறது. பின்னர் அருணாசலப்பிரதேச மாநிலத்தில் 'சியாங்' ஆறாகவும் அதனைத் தொடர்ந்து திபங், லோகித் ஆறுகளுடன் இணைந்து அஸ்ஸாமில் பிரம்மபுத்திராவாக பிரவாகமெடுத்து ஓடுகிறது. அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் விரிந்து ஓடி வங்கதேசத்தில் ஜமுனா என்ற ஆறாக உருமாறி வங்காள விரிகுடாவில் இது கலக்கிறது.
இந்த ஆற்றின் குறுக்கே திபெத் தலைநகரான லாசாவில் இருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மிகப்பெரிய அணையை சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனா கட்டத் தொடங்கியது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பிரம்மபுத்திரா மூலம் கிடைக்கும் நீரின் அளவு கணிசமாக குறையும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.
ஆனால் சீனாவோ இந்தியாவின் எதிர்ப்பை பற்றி கவலைப்படாமல் நாங்கள் மின்சார பயன்பாட்டுக்காகத்தான் இந்த அணையை கட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு திபெத்தின் கியாக்கா கவுன்ட்டியில் பிரமாண்ட மின்நிலையத்தையும் அமைத்தது.
ரூ9,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு சாங்குமு அணை நீர் மின் உற்பத்தி நிலைய திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையத்தில் உள்ள 6 யூனிட்களிலும் நேற்று ஒரே நேரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கியது.
இது உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மின் நிலையமாகும். ஆண்டுக்கு 250 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது. இதன் மூலம் மத்திய திபெத் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள சீன பகுதியில் மின்சார தட்டுப்பாட்டு ஏற்படாது.
மேலும் பிரம்மபுத்திராவில் வெள்ளம் ஏற்படும்போது அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் சீனா திறந்து விடும் அப்போது ஏற்படும் வெள்ளத்தால் இந்தியா மிக மோசமாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.