பிபிசி டிவிக்கு தடை விதித்த சீனா - நடந்தது என்ன?
சீனா: கொரோனா வைரஸ் மற்றும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் பரவியது என்று குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது தான் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உலக நாடுகள் கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றன.
அதிலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய திரிபு உருவாகி அது ஒருபக்கம் பாடுபடுத்தி வருகிறது.
ஆட்சேபனை
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி பிபிசி வேர்ல்டு நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
அடக்குமுறை
அதேபோல், ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவது போன்ற செய்திகளை வெளியிட்டதற்காகவும் பிபிசி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்
முன்னதாக, கடந்த பிப்.4ம் தேதி பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காம் (Ofcom), சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் லைசென்ஸை ரத்து செய்தது. இந்த சேனலுக்கான லைசென்ஸ் Star China Media Ltd நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
ஊடக சுதந்திரம்
சீனாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், 'சீனாவின் நடவடிக்கை கருத்து ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது' என்று தெரிவித்துள்ளார்.
கண்டிக்கிறோம்
பிபிசி உலக செய்திகளை தடை செய்வதற்கான சீனாவின் முடிவை நாங்கள் முற்றிலும் கண்டிக்கிறோம் என்று அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளின் அங்கமாக இது கருதப்படுகிறது என்றும் கூறியுள்ளது.
வெளிப்படையான செய்திகள்
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தனது அறிக்கையில், "சீன அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. உலக செய்திகளை வெளிப்படையாகவும், எந்தவித சார்புமின்றி, அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.