'ஜாக் தி ரிப்பர்' பாணியில் 11 பெண்களைக் கொன்ற சீரியல் கொலையாளி.. மரண தண்டனை அளித்தது சீன நீதிமன்றம்!
பெண்களைப் பின்தொடர்ந்து அவர்களை கற்பழித்து கொடூரமாகக் கொல்லும் சீரியல் கொலையாளி போல சீனாவில் 11 பெண்களைக் கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பீய்ஜிங் : சீனாவில் ஜாக் தி ரிப்பர் பாணி சீரியல் கொலையாளிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு 11 பெண்களைக் கொன்ற வழக்கில் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
53 வயது கயோ செங்க்யாங்க் பெண்களைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ளான். 1988ல் முதன்முதலில் இந்த சைக்ககோத்தனமான கொலையை அரங்கேற்றியுள்ளான் கயோ. சிவப்பு நிற ஆடை அடைந்திருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை வீடு வரை பின்தொடர்ந்து சென்று கழுத்தை அறுத்து, உடலை சிதைத்து கொடூரமான கொலைகளை இவன் செய்துள்ளதாக சீன நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவனால் அண்மையில் கொல்லப்பட்டது 8 வயது சிறுமி.
பெண்களைக் கொள்வதோடு நின்றுவிடாமல் அவர்களின் உடல் உறுப்பு பாகங்களையும் வெட்டி வீசுவது போன்ற சைக்கோத் தனத்தையும் செய்துள்ளான். பெண்களைக் கொடூரமாகக் கொல்லும் கயோ கடந்த 2016ம் ஆண்டில் கைது செய்யப்பட்டான். அவனை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
தன்னுடைய பாலியல் அரக்கத்தனத்தை பெண்கள் மீது காட்டியதோடு அவர்களின் சடலங்களையும் சிதைத்துள்ளதாக நீதிமன்றத்தில் கயோ மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சீரியல் கொலையாளி கயோவின் கொடூரத்தனமான கொலைகளையும், அவனின் முறையற்ற செயல்களையும் நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
சமுதாயத்திற்கே இவன் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதால் அவன் தண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கன்சூ மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் கயோ 1988 முதல் 2002 வரை தன்னுடைய சீரியல் கொலைகளை அரங்கேற்றியுள்ளான்.
இதனைத்தொடர்ந்து கயோவை போலீசார் தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்களிட்ம் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களையும் கயோவின் டிஎன்ஏ மாதிரியை சோதித்துப் பார்த்தில் இவன் தான் கொலையாளி என்பதை சீன போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து கயோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு ஜாக் தி ரிப்பர் என்று பெயர் வழங்கப்பட்டது. அதாவது சீரியல் கொலையாளி. பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து அவர்களின் உடல்களை சிதைப்பதோடு, உள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வது, முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவது உள்ளிட்டவற்றை செய்து வந்தான். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன.