திடீருன்னு கிளம்பிய பூட்டான் எல்லை பிரச்சினை.. இந்தியாவை எதிர்கொள்ள சீனா தந்திரம்
பீஜிங்: பூட்டான் நிலப்பகுதியில் சிலவற்றை தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறுவதன் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான தந்திரம் இருப்பதாக தெரிகிறது. இதுவரை இந்த பகுதிகளை சீனா உரிமை கொண்டாடியது இல்லை, திடீரென்று இப்படி கிளம்பியுள்ளது.
இந்தியா, சீனா இடையே உள்ள நாடுதான் பூட்டான். இதன் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், சீனா பிற நாடுகளில் செய்வது போலவே ஒவ்வொரு பகுதியாக தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட இடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
பூட்டான் நாட்டின் சக்தேங் வனவிலங்கு சரணாலய பகுதியை, தங்களுடையது என்று சீனா கூறி வருகிறது. எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான அதை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்று பூட்டான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது ஒரு பக்கம் என்றால், இப்போது, புதிதாக மேலும் சில பகுதிகளையும் தங்களுடையது என்று சீனா கூறி வருகிறது.
சீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்
இந்தியா
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இதுபற்றி கூறுகையில், பூட்டான் உடனான எல்லையில் எப்போதுமே மாற்றம் செய்யப்பட்டது கிடையாது. பூட்டானின் கிழக்கு மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சனை இருக்கிறது மூன்றாவது நாடு இதில் தலையிடுகிறது. இவ்வாறு அவர் இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.
டோக்லாம்
2017 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் விடுதலை படை ராணுவம் இந்தியா-பூட்டான் சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பிடபூமி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து விட்டது. ஆனால், இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு சீனா அங்கு சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தது. 72 நாட்கள் இரு நாட்டு ராணுவ வீரர்களும் நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் சூழ்நிலை உருவாகியது. இதன் பிறகு டோக்லாம் எல்லை பழைய நிலைமைக்கு திருப்பப்பட்டது.
இந்திய சாலை திட்டம்
இப்போது என்னடா என்றால், டோர்சா/அமோச்சு பகுதியில் மற்றொரு சாலை திட்டத்தை சீனா கையில் எடுத்துள்ளது. இந்தியா மேற்கொண்டு வரும் சிலிகுரி சாலை திட்டத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்த இந்த சாலை திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு லடாக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவாக்கம் செய்ய கூடிய காலம் முடிவடைந்து விட்டது. இது வளர்ச்சிக்கான காலகட்டம் என்று தெரிவித்து இருந்தார்.
இதுவரை பேசியது இல்லை
சீனாவை மறைமுகமாக நரேந்திர மோடி இப்படி குறிப்பிட்ட நிலையில், சீன தூதரகம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. சீனா தனது எல்லையில் உள்ள 14 நாடுகளில் 12 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம் என்று தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பூடான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1984 ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் 24 முறை எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்போது பிரச்சினையை கிளப்ப கூடிய கிழக்கு பூட்டான் பகுதி எல்லை தொடர்பாக இதுவரை சீனா அந்த பேச்சுவார்த்தையின்போது பிரச்சனை கிளம்பியது கிடையாது. இப்போதுதான் புதிதாக ஆரம்பித்துள்ளது. கிழக்கு பகுதியில் பூட்டான் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு
திடீரென இந்த பிரச்சினையை கிளப்ப காரணம் இந்தியாவுக்கு கிழக்கில் இருந்தும் தொல்லை கொடுப்பதற்காகத்தான். ஏற்கனவே இந்தியாவின் வடக்கு பிராந்தியமான லடாக்கின் கிழக்குப் பகுதியில், சீனா இந்திய எல்லையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறது. அங்கு, இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளநிலையில், பூட்டான் வழியாக மூக்கை நுழைத்து இந்தியாவின் கவனத்தை அந்தப் பக்கம் திரும்புவதற்கு சீனா முயற்சிப்பதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நாடு பிடிக்கும் ஆசை கொண்ட நாடு சீனா என்றழைக்கப்படுகிறது. இப்போது அந்த ஆசை வெறியாக மாறியுள்ளது.