பூமியை மிரட்டிய சீனாவின் டியாங்காங் விண்வெளி ஓடம்.. எரிந்தபடியே பசுபிக் கடலில் விழுந்தது
Recommended Video
பெய்ஜிங்: பூமியை மிரட்டி வந்த சீனாவின் டியாங்காங் விண்வெளி ஓடம் எரிந்தபடியே பசுபிக் கடலில் விழுந்தது.
சீனா 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ந்தேதி 'டியான்காங்-1' என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவி, நிறுவியது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும்.
இந்த விண்வெளி மையம் தனது முக்கியப்பணிகளை 2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
செயலிழந்த விண்வெளி ஓடம்
இதைத்தொடர்ந்து ‘டியான்காங்-1' தனது பணிகளை முடித்துக்கொண்டு செயலிழந்துவிட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது.
எங்கு விழும்
இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். ஆனால் பூமியில் எங்கு விழும் என்று விஞ்ஞானிகளால் கணிக்க முடியாமல் இருந்தது.
பசுபிக் கடலில் விழுந்தது
மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தால் பேராபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்ததாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
ஓடத்தின் பாகங்கள்
புவியின் மேற்பரப்பில் விண்வெளி ஓடத்தின் பாகங்கள் நுழைந்ததும் காற்றின் உராய்வால் தீ பிடித்து எரிந்து பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்விச் நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு விண்வெளி ஓடம் தெற்கு பசுபிக் கடலில் விழுந்தது.
உயிர்ச்சேதம் ஏற்படவில்லை
விண்வெளி ஓடம் பசுபிக் கடலில் விழுந்ததால் மனிதர்களுக்கு எந்த பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. டியாங்காங் விண்வெளி ஓடம் பூமியில் விழுந்தால் அதில் உள்ள ஹைட்ரஜன் கேஸால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.