சீனா பழிக்கு பழி.. அமெரிக்க எம்பிக்கள், தூதருக்கு அதிரடி தடை.. இத்தோடு நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை
பீஜிங்: அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியை தொடங்கியுள்ளது சீனா. அமெரிக்காவின் 3 எம்பிக்கள் மற்றும் அமெரிக்க தூதர் மட்டத்திலான அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. சீனாவுக்குள் அவர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்களிடம் சீனா கடுமை காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. ஆனால் இதை சீனா பலமுறை மறுத்துள்ளது.
அதேநேரம், மனித உரிமை அமைப்புகளும் வெளிநாட்டு ஊடக செய்திகளும், அங்குள்ள மறு கல்வி முகாம்களில் சுமார் 10 லட்ம் முஸ்லீம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றன.
'paul harries fellow ' : முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவம்
முஸ்லீம்களுக்கு எதிராக
தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருக்க, இந்த முஸ்லீம்களுக்கு விழிப்புணர்வு, கொடுப்பதற்காக இந்த முகாமை நடத்துவதாக கூறும் சீனா, அங்கு முஸ்லீம்கள் துன்புறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கிறது. இதையடுத்து, சீன அதிகாரிகள், மற்றும் சிஞ்சியாங்கில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சென் குவாங்குவோ உட்பட பலரின் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்தது. சொத்துக்களை முடக்கியது. இதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க எம்பிக்களுக்கு தடை
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இன்று அளித்த பேட்டியின்போது, டெக்சாஸின் குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ், மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாம் பிரவுன் பேக், காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் ஆகியோர் மீது தடை விதிக்கப்படுகிறது.
தடைகள் உடனடியாகத் தொடங்கும். இவர்கள் சீனாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும்.
அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்
ஹாங்காங் மற்றும் தைவானில் உள்ள உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது பொருத்தமற்றது. அமெரிக்கா தனது தவறான முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவது மற்றும் சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் சொற்களையும் செயல்களையும் நிறுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலைமையை பொறுத்து மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
ட்ரம்ப் கருத்து
கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த ஜி -20 பொருளாதார உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்தபோது, "முஸ்லீம்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை அமைப்பதில் ஜிங்பின் ஆர்வம் காட்ட வேண்டும். " என்று டிரம்ப் தெரிவித்தாராம். இதை, அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருப்பதால், சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகளை துவங்கியது. இதற்கு சீனா பதிலடி கொடுத்து பழிவாங்கியுள்ளது.