தென்சீனா கடல் முப்பாட்டனுக்கும் மூத்தோர் வழி சொத்து... சிங்கிள் செமீ கூட விட முடியாது: சீறும் சீனா
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் எல்லையில் ஒரு சென்டிமீட்டரைக் கூட இழக்க முடியாது என்று சீனா மீண்டும் சீறியுள்ளது.
தென் சீனக் கடல் எல்லையில் சர்ச்சைக்குரிய தீவுகளை உரிமை கொண்டாடுவதற்கு சீனாவுக்கு சட்ட ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ உரிமை இல்லை என தி ஹேக்கில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருந்தது.
இதனை ஏற்கவே முடியாது என சீனா தெரிவித்து விட்டது. அத்துடன் சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் அமைத்துள்ள சட்டவிரோத விமான நிலையங்களில் சோதனை ஓட்டத்தையும் சீனா நடத்தியது. தற்போது தம்முடைய பிடிவாத கருத்தை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சிங்கள் செமீ கூட விடமுடியாது
இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை கவுன்சிலர் யாங் ஜியெச்சி கூறுகையில், சீனா மிகப்பெரிய பரப்பை உடையதாக இருக்கலாம். ஆனால், மூதாதையர் விட்டுச் சென்றவற்றில் ஒரு சென்டிமீட்டர் பகுதியைக் கூட இழக்க முடியாது. இறையாண்மை விவகாரம் என்பது சீனாவின் முக்கியமானது விஷயம் என்றார்.
ஜப்பான் பிரதமருடன் பேச்சு
இதனிடையே ஆசிய-ஐரோப்பிய மாநாடு மங்கோலியாவின் உலன்பாதர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சீன பிரதமர் லீ கெகியாங்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சந்தித்துப் பேசினர்.
மூக்கை நுழைக்காதீங்க..
அப்போது சீனா பிரதமர் லீ கெகியாங் கூறுகையில், தென் சீனக் கடலில் ஜப்பான் நேரடியாக ஈடுபடவில்லை. எனவே ஜப்பான் அரசு கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்றார்.
ஜப்பான் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தென்சீனக் கடல் பகுதி சர்வதேச பிரச்சினை. இந்த விவகாரத்தில் ஹேக் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை சீன அரசு மதித்து நடக்க வேண்டும் என்றார்.