'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
பெய்ஜிங்: கொரோனா இரண்டாம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி, தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகச் சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தினசரி உயிரிழப்பும் 2,000ஐ தாண்டியுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா காரணமாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1.6 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி.. 18+ கவனத்திற்கு.. ஏப்.28 முதல்.. ஆன்லைனில் 'ரெஜிஸ்டர்' செய்வது எப்படி?
ஒன்றுபட வேண்டும்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த மனித இனத்திற்கே பொதுவான எதிரியாக உருவெடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிராகப் போராடச் சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.
இந்தியாவுக்கு உதவ தயார்
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் நிலை மிக மோசமாக உள்ளது எங்களுக்குத் தெரியும். இந்தியாவில் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவப் பொருட்களுக்குத் தற்காலிகமாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தியாவுக்குத் தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கச் சீனா தயாராக உள்ளது. இது கொரோனாவைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவும்" என்று தெரிவித்தார்.
இந்தியா செய்த உதவி
இருப்பினும். இந்தியாவுக்கு உதவுவது தொடர்பாக மத்திய அரசிடம் சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா பரவல் மோசமாக இருந்தபோது, 15 டன் எடையுள்ள மருத்துவ பொருட்களைச் சீனாவுக்கு அனுப்பி இந்தியா உதவியிருந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த எவ்வித உதவியையும் செய்யத் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீனா அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மருந்து பொருட்கள்
இந்தியாவில் தற்போது மருத்துவ பொருட்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சீனாவில் இருந்து மருத்துவ பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இருப்பினும், சரக்கு விமானங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் இந்திய நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. சரக்கு விமானங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும் எனவும் தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.