இந்தியா-பூடான் உறவு வலுப்படுவதால் எங்களுக்கு கவலை இல்லை... மகிழ்ச்சியே: சீனா
பீஜிங்: பூடானுடன் இந்தியா உறவை மேம்படுத்திக் கொள்வது குறித்து தங்களுக்கு கவலை எதுவும் இல்லை எனவும், அண்டை நாடுகள் ஒன்றுக்கொன்று நட்பு ரீதியாக உறவை மேம்படுத்திக் கொண்டால் அது தங்களுக்கு மகிழ்ச்சியானதுதான் என மோடியின் பூடான் பயணம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது சீனா.
எல்லைப் பிரச்சினையில் நீண்ட காலமாக இந்தியா -சீனா இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக பூடான் நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வதற்கு சீனா முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், அது பலிக்கவில்லை.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடான பூடானுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, ‘இந்தியா-பூடான் இடையே வலுவான நட்புறவு மேலும் வளரும்' எனக் குறிப்பிட்டார்.
மோடியின் பூடான் பயணம் குறித்து சீனாவிடம் செய்தி நிறுவனங்கள் கருத்து கேட்டன. அதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சூன்யிங் கூறியதாவது :-
பூடானுடன் நாங்கள் தூதரக உறவுகளை அமைத்துக் கொள்ளவில்லை. எனினும், இரு நாடுகளிடையே நட்பு ரீதியான பரிமாற்றங்களும், பயண வருகைகளும் தொடரும். பூடானின் சுதந்திரம், இறையாண்மை, எல்லையில் ஒற்றுமை ஆகியவற்றை மதிக்கிறோம். தவிர, பக்கத்து நாடு என்பதால் பூடானுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம்.
பூடானுக்கு இந்திய பிரதமர் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம். பூடானுடன் இந்தியா உறவை மேம்படுத்திக் கொள்வது குறித்து எங்களுக்கு கவலை எதுவும் இல்லை. அண்டை நாடுகள் ஒன்றுக்கொன்று நட்பு ரீதியாக உறவை மேம்படுத்திக் கொண்டால் அது எங்களுக்கு மகிழ்ச்சியானதுதான்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.