கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... சீக்கிரம் அனுமதி தரோம்... கொரோனா வல்லுநர் குழு அனுமதிப்பது குறித்து சீனா
பெய்ஜிங்: கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா செல்லவிருக்கும் வல்லுநர் குழுவுக்கு அனுமதி அளிக்கத் தேவையான பணிகள் தற்போது தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபே மாகானதிலுள்ள வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முடங்கின.
தற்போது சீனாவில் இயல்பு நிலை திரும்பிவிட்டாலும், உலகின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகள் குறித்த தகவல்களும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தோற்றம்
உலகை ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கும் பணிகளும் பல்வேறு நாடுகளிலும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும்,வைரசின் தீவிர தன்மை குறித்துத் தெரிந்து கொள்ள, இதன் தோற்றத்தை நாம் கண்டறிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த வைரசின் தோற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் உலக சுகாதார அமைப்புக் குழு அமைத்தது.
உலக சுகாதார அமைப்பு அதிருப்தி
கொரோனா தோற்றம் குறித்து முக்கிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட இந்தக் குழு இம்மாத தொடக்கத்தில் சீனா செல்வதாக இருந்தது. இருப்பினும், இக்குழுவுக்கு உரிய அனுமதி தராமல் சீனா இழுத்தடித்தது. இந்நிலையில் சீனாவின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வுப் பணிகள் மிகவும் முக்கியமானது என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் சி நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
விரைவில் ஒப்புதல்
இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின், கொரேனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வல்லுநர் குழு வூஹான் வருகைக்கான ஏற்பாடுகள் இன்னும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வல்லுநர் குழுவை அனுமதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், அதற்கான தேதிகள் தற்போது தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார். மேலும், நடைமுறைகளை முடித்து, திட்டம் உறுதி செய்யப்பட்டவுடன் வல்லுநர் குழுவுடன் இணைந்து தேசிய சுகாதார ஆணைய உறுப்பினர்களும் செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பாதிப்பு
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டாலும் கூட கொரோனா பாதிப்பு பல நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3.06 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசில் மற்றும் பிரிட்டனிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு 8.94 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19.44 லட்சத்தைக் கடந்துள்ளது.