செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப்பாதைக்குள் சீன விண்கலம்.. 48 மணி நேரத்தில் இரண்டாவது சாட்டிலைட்
பெய்ஜிங்: கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது செயற்கைக்கோளாக சீனாவின் தியான்வென் -1 விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு உலக நாடுகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் அமெரிக்காவின் எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற வைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது செயற்கைக்கோளாக சீனாவின் தியான்வென் -1 விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. முன்னதாக, நேற்று ஐக்கிய அமீரகத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்திருந்தது.
சீன சாட்டிலைட்
அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்றால், இன்னும் சில மாதங்களில் சீனா செயற்கைக்கோளில் உள்ள ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும். ஆனால், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பல்வேறு நாடுகளும் தரையிறங்க முயன்றுள்ளது. ஆனால், அமெரிக்கா மட்டுமே இதுவரை வெற்றிகரமாகத் தனது செயற்கைக் கோளை தரையிறக்கியுள்ளது.
சோலார் சக்தி
சீன செயற்கைக்கோள் வெற்றிகரமாகத் தரை இறங்கும்பட்சத்தில், செவ்வாய்க்கிரகத்தில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக தரையிறக்கிய இரண்டாவது நாடு என்ற பெருமையைச அந்நாடு பெறும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் ரோவர் சோலார் சக்தி மூலம் மூன்று மாதங்கள் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆர்பிட்டார் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முயற்சி
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நிலத்தடி நீர் குறித்தும், இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் யாரேனும் வாழ்ந்துள்ளனரா என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை அடையச் சீனாவின் இரண்டாவது முயற்சி தியான்வென் -1 ஆகும். முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யச் சீனா ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது. ஆனால், அது பூமியின் புவி வட்டப் பாதையைத் தாண்டும் முன் வெடித்துச் சிதறியது.
முன்னணியில் அமரிக்கா
செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளில் தற்போது அமெரிக்காவே முன்னணியில் உள்ளது. இதற்காக அமெரிக்கா இதுவரை எட்டு செயற்கோள்களை அனுப்பியுள்ளது. அதில் ஒரு லேண்டரும் ரோவரும் தற்போது வரை செவ்வாய் கிரகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா அனுப்பியுள்ள மற்றொரு சாட்டிலைட் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவுள்ளது.