கொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா!
பீஜிங்: கொரோனா தடுப்பூசியை வழங்கி அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல பெயரை சம்பாதித்து வருவாதல் சீனா கோபமடைந்து உள்ளது. அந்த நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
அதேநேரம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தவிர்த்து மற்ற சார்க் நாடுகளுக்கு கோவிஷீல்டு மருந்தை இலவசமாக வழங்கியுள்ளது இந்தியா. ஜனவரி 27ஆம் தேதி 5 லட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு பாராட்டுக்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதும் அங்கும் அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டுக்கும் இந்தியா தடுப்பூசி அனுப்பி வைத்துள்ளது. சஞ்சீவி மலையை ஹனுமார் தூக்கிச் செல்லும் போட்டோவோடு பிரேசில் அதிபர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார். உலக சுகாதார நிறுவன தலைவர், மற்றும் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் ஆகியோரும் இந்திய அரசை பாராட்டியுள்ளனர்.
சீனா பொய் வாக்குறுதி
அதேநேரம், சீனா சில நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்த போதிலும், அது வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது. செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் இந்தியா அதிரடியாக எடுத்த இந்த முடிவின் காரணமாக பிற நாடுகளிடம் நல்ல பெயரை ஈட்டியுள்ளது. இதனால் கோபமடைந்த சீனா, குளோபல் டைம்ஸ் மூலம் விஷம் கக்கியுள்ளது.
விஷம் கக்கும் சீனா
சீன ஊடகத்தில் கூறியிருப்பதைப் பாருங்கள்: "பிரிட்ஜிங் ஆய்வை" சீரம் இன்ஸ்ட்டிடியூட் இன்னும் முடிக்கவில்லை. வரும் பிப்ரவரி மாதத்தில்தான் இந்தியாவில் தடுப்பூசி தடுப்பு பரிசோதனையை நடத்த முயற்சி நடக்கிறது. சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், உயர்தர தடுப்பூசி உற்பத்தி அங்கு எப்படி நடக்கும் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசிகள் தெற்காசிய நாடுகளுக்கு ஒரு வகையான உதவியாக வழங்கப்படுகிறது. ஆனால் "தரம் மீதான கவலைகள்" காரணமாக பல நாடுகள் உண்மையில் இந்திய தடுப்பூசிகளை வாங்கவில்லை. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் பயப்படுகிறார்கள்
மற்றொரு கட்டுரையில், குளோபல் டைம்ஸ் கூறுகையில், இந்திய ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் சிலர், சீன தடுப்பூசிகளை போடத் தயாராக இருப்பதாக கூறியதாகவும், இந்திய தடுப்பூசியை அவர்கள் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் இந்திய தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள் என்று இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக் காட்டி இந்திய தடுப்பூசிகள் தரமற்றவை என்று கூறியுள்ளது குளோபல் டைம்ஸ் நாளிதழ்.
தனிமையில் சீனா
சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா ஒப்பந்த அல்லது வணிக அடிப்படையில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இது சீனாவை தனிமைப்படுத்த உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.