தலைவன் நல்லா இருந்தா தானா நாடு நல்லா இருக்கும்... டிரம்பை விளாசும் சீனா
பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்பது அந்நாட்டில் இருக்கும் மோசமான தலைமைக்கு ஒரு சான்று என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் விமர்சித்துள்ளது.
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஜோ பைடனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென்று உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கலவரத்தை ராணுவத்தினர் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தலைநகரில் அவசர நிலை
இந்நிலையில், வாஷிங்டனில் பொது அவசரநிலையை அடுத்து வரும் 15 நாட்களுக்கு அமல்படுத்துவதாக அந்நகர மேயர் முரியல் பவுஸர் அறிவித்துள்ளார். நேற்று முதல் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற மறுநாள் வரை அவசரநிலை இருக்கும். அதிபர் பதவியேற்கும் நாளிலும் வன்முறைச் சம்பவம் நடைபெறலாம் என்று அஞ்சப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனா விமர்சனம்
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவைச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைமஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
குறைபாட்டின் வெளிப்பாடு
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது அமெரிக்கா கட்டமைப்பில் உள்ள குறைபாட்டின் ஒரு அடையாளம் என்று குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. அமெரிக்கா சமூகத்தில் உள்ள கடும் பிரிவுகளையும், அத்தகைய பிரிவை அந்நாடு கட்டுப்படுத்தத் தவறியதையும் இந்த வன்முறை காட்டுவதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு
பல தலைமுறைகளாக அதிகாரத்தை அமெரிக்க அரசியல்வாதிகள் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வதால், அமெரிக்க அரசியல் அமைப்பு சீரழிந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங் வன்முறையை அற்புதமான காட்சி என்று குறிப்பிட்ட அமெரிக்க தலைவர்கள் அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக குளோபல் டைமஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
பைடன் என்ன செய்யப்போகிறார்
அமெரிக்க அதிபர் டிரம்பின் குறுகிய தேசியவாதமே அந்நாட்டைப் பாதித்ததாகச் சீனா கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த இருண்ட நாட்களிலிருந்து பைடன் நிர்வாகம் என்ன மாதிரியான படிப்பினைகளை கற்றுக்கொள்கிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக அமெரிக்காவில் நடைபெறும் வன்முறை என்பது அந்நாட்டின் தலைவர்கள் யதார்த்தத்துடன் தொடர்பை இழந்துவிட்டார்கள் என்பதே காட்டுகிறது என்றும் சீனா விமர்சித்துள்ளது.