மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: இந்திய தூதரை நேரில் அழைத்தும் சீனா எதிர்ப்பு!!
பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு இந்திய தூதரை நேரில் அழைத்தும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அருணாசலபிரதேசம் உதயமான 23வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ரயில் மற்றும் மின் திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார்.
ஆனால் அம்மாநிலத்துக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதர் அசோக் காந்தாவுக்கு சீன துணை வெளியுறவுத் துறை அமைச்சர் லியு ஜென்மின் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்து சம்மன் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து தம்மை சந்தித்த இந்திய தூதரிடம் சீனாவின் எதிர்ப்பையும், அதிருப்தியையும் அவர் பதிவு செய்தார். அருணாசலபிரதேசத்துக்கு பிரதமர் சென்றது சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறிய செயல் என்று லியு ஜென்மின் கூறியிருக்கிறார்.