சீனாவை சேர்ந்த “தமிழ்” பேராசிரியர் பெய்ஜிங்கில் காலமானார்
சீனா: சீனாவைச் சேர்ந்த தமிழ்பேராசிரியர் சுன் குவோஜியாங் கடந்த 8 ஆம் தேதியன்று பெய்ஜிங்கில் காலமானார்.இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக சீன வானொலி தமிழ்ப் பிரிவில் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பெயரில் "சுந்தரன்" என்று அழைக்கப் படும் அவர் 1940 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் நகரில் பிறந்தார்.1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தமிழ் அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார்.அவரின் தளராத தமிழ் ஈடுபாட்டால் நேயர்கள் அனைவரும் அவரை "சுந்தரன் அண்ணா" என்று அன்புடன் அழைத்தனர்.
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2 ஆண்டுகள் இலங்கையில் தமிழ் மொழியை முறையாக பயின்றவர் இவர்.பேராசிரியரான சுந்தரன் சீன மொழிபெயர்பாளர் கமிட்டி உறுப்பினர் மற்றும் பாரதியார் பல்கலையில் தமிழ் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.
1983 ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.இவர் தமிழ்ப் பிரிவில் தலைவராக இருந்த போது பல அரிய தமிழ் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்வேறு நேயர்கள் சீன வானொலியின் நேயர்கள்தான்.ஊரைச் சொன்னாலே பேரைச் சொல்லும் அளவிற்கு நேயர்களுடன் நெருக்கமாக இருந்தவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் "திருக்குறள்" நூலை சீன மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.தமிழ் கற்கும் சீன மாணவர்களுக்கான பாடநூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழை துச்சமாக நினைக்கும் தமிழர்களுக்கு மத்தியில், சீனாவில் தமிழ் மொழியின் புகழ் பரப்பிய பேராசிரியர் சுந்தரனின் மறைவு நமக்கெல்லாம் பேரதிர்ச்சியான செய்திதான்.அவருக்காக அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களான நமது தலையாய கடமை.