வாலிபால் போட்டியின்போது பிரசவம்... குழந்தையை புதரில் வீசி விட்டு தொடர்ந்து விளையாடிய பெண்!
பெய்ஜிங்: சீனாவில் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பிரசவித்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீராங்கனை புதரில் வீசி விட்டு, மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் சாங்ஸிங் நகரில் பெண்களுக்கான தேசிய கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், 18 வயது வீராங்கனை ஒருவர், தான் நிறைமாதக் கர்ப்பிணி என்பதை மற்றவர்களுக்கு மறைத்து விளையாடிக் கொண்டிருந்தார்
போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த வீராங்கனைக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர், கழிப்பறை சென்று குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் அக்குழந்தையை அருகில் இருந்த புதரில் வீசிவிட்டு, மீண்டும் மைதானத்துக்கு திரும்பிய அவர் கைப்பந்து போட்டியைத் தொடர்ந்தார்.
இதற்கிடையே அந்த வழியாக சென்றவர் ஒருவர் குழந்தையைக் காப்பாற்றினார். குழந்தையிடம் இருந்து ரத்தம் தோய்ந்த காலடித் தடங்கள் மைதானத்திற்குள் பதிவாகியிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து வீராங்கனையின் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. பிறந்த குழந்தையை புதரில் வீசிச் சென்ற வீராங்கனையின் செயலால் போட்டியைப் பார்க்க வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.