ஆஹா நல்ல பலனாம்! கொரோனாவுக்கு எதிராக 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையிலெடுத்த சீனா!
Recommended Video
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க சீனா , தனது 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையில் எடுத்துள்ளது. அதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக சொல்கிறார்கள்.
சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுகான் நகரின் இறைச்சி சந்தையில் இருந்து உருவாகி பரவியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் தாக்கி நாள்தோறும் 100க்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். சீனாவில் நேற்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள்.
புதிதாக 2009 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமை காலையுடன் ஒப்பிடும் போதும் சுமார் 600 பேருக்கு குறைவாக பரவி உள்ளது.
சீனாவில் கொரோனா.. ஒரே நாளில் 142 பேர் சாவு.. பலி 1665 ஆக உயர்வு , 68000 பேருக்கு பாதிப்பு
20 நாடுகளில் பாதிப்பு
நேற்று காலை நிலவரப்படி ஒரு நாளில் 143 ஆக பலி எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று காலை 142 ஆக குறைந்துள்ளது. சீனாவில் இருந்து சென்றவர்களால் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஐரோப்பா(கண்டம்) உள்பட 20 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. சுமார் 500 பேருக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பாரம்பரிய மருந்துகள்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.சீனாவும் தீவிர ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக முயற்சிகள் நடந்து வருகிறது. இன்னும் வெற்றிகரமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில்கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் பரவி உள்ள ஹுபே மாகாணத்தில் தனது பாரம்பரிய மருந்துகளை கொடுத்து முயற்சி செய்து வருகிறது. இந்த தககவலை ஹுபே மாகாண சுகாதார அமைப்பின் தலைவர் வாங் ஹெஷங் தெரிவித்தார்.
2200 மருத்துவர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 3000 ஆண்டு பழமையான சீன மருத்து முறை மருந்துகளை சீனா கொடுத்து வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறதாம். இதையடுத்து பாரம்பரிய சீன மருத்துவர்கள் சுமார் 2200 பேர் ஹுபே மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது பாரம்பரிய சீன மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.
மருத்துவர்கள் பற்றாக்குறை
இதற்கிடையே ஹுபே மாகணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாகவே 60 ஆயிரத்திற்கு மேல் தாண்டி உள்ள நிலையில், அவர்களை குணப்படுத்த போதிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பல்லாயிரம் டாக்டர்கள் சீனாவின் வெவேறு நகரங்களில் இருந்து ஹுபே மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 24 மணிநேரமும் இரவு பகலாக நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சீனாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இப்போது கடுமையாக அதிகரித்து உள்ளது.