தெற்கு திபத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம்- மீண்டும் சர்ச்சையை உருவாக்கிய சீனாவின் புது 'மேப்'!
பெய்ஜிங்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் கீழ் உள்ள தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி சீனா வெளியிட்டிருக்கும் புதிய வரைபடம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது அருணாச்சல பிரதேசம். ஆனால் சீனாவோ இதை தமது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சீனா அதிகாரப்பூர்வ வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதிகளை தமது நாட்டின் ஒருபகுதி என்று குறிப்பிட்டிருக்கிறது சீனா.
அதேபோல் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டிருக்கிறது சீனா. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தென்பகுதிதான் அருணாச்சல பிரதேசம் என்கிறது சீனாவின் வரைபடம்.
இந்த புதிய சர்ச்சையால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.