நேபாளத்தில் இருந்து பீகார் வரை ரயில் பாதை அமைக்க சீனா விருப்பம்
பீஜிங்: திபெத்தில் இருந்து நேபாளம் வரை அமைத்துள்ள ரயில் பாதையை பீகார் மாநிலம் வரை நீட்டிக்க சீன அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நேபாளம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய பகுதிகளுக்கு, சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இந்நிலையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் இருந்து நேபாளம் வரை ரயில் பாதை அமைத்துள்ளது.
நேபாளம் மற்றும் இந்திய எல்லையை ஒட்டிய ரசூவாகதி என்ற பகுதியையும், சீன ரயில் பாதை இணைத்துள்ளது. நேபாளத்தின் ரசுவகாதி வழியாக பிர்குன்ஞ்ச் வரை செல்லும் இந்த ரயில் பாதை இந்தியாவின் பீகார் மாநிலத்தின் எல்லையில் 240 கி.மீ வரை தொட்டு செல்லும் வகையில் அமைக்கிறது.
சீனா உருவாக்கவுள்ள இந்த ரயில் பாதை வரும் 2020-ம் ஆண்டுக்குள் போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தெற்காசிய நாடுகளுடன் இணக்கமான வர்த்தக உறவை மேம்படுத்த முடியும் என்றும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் பாதையின் மூலம் இந்தியா சீனாவுடன் வர்த்தகம் செய்வது எளிதாக்கப்படும் என்றும், கொல்கத்தா வழியாக சரக்கு போக்குவரத்து நடப்பதால் நேரமும், செலவும் அதிகமாவதாகவும், அதை இதன் மூலம் தடுக்கலாம் என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.