காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்!
பீஜிங் : இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது.
டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன.
பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா மிரட்டும் தொனியில் தொடர்ந்து கெஞ்சி வருகிறது.
மீடியா கட்டுரை
இதனிடையே, இது குறித்து சீன ஆய்வாளர் லாங் ஷிங்சுன், அந்த நாட்டு மீடியாவான குளோபல் டைம்ஸ்-சில் எழுதி உள்ள கட்டுரையில், பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக் கொண்டால் அப்பகுதி பொதுவான பிரதேசமாக இருக்கும். தொல்லைதரும் பகுதியாக இருக்காது.
தனி நாடு
சீனாவின் சாலை திட்டத்தால் வடகிழக்கு மாநிலங்கள் தனி நாடாக பிரிந்துவிடும் என்று இந்தியா அச்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியா சரியான கட்டமைப்பை செய்து தரவில்லை. அதை சீனா செய்வதால் அந்த மாநிலங்கள் தனி நாடாக பிரிந்துவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு
பூடானுக்காக இந்தியா வரிந்து கட்டுவதை போல, பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் தவிர 3வது நாட்டின் ராணுவமும் (சீனா) நுழையும் என குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறை
இதுவரை சீனா தரப்பில் இந்தியாவை மிரட்டும் தொனியில் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தை சீனா இப்போதுதான் கிளப்ப ஆரம்பித்துள்ளது. ஏதாவது சொல்லி மிரட்டி, எப்படியாவது இந்திய படைகளை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்பதே சீனா எண்ணம். இந்தியாவுடன் ராணுவ மோதலை சீனா தவிர்க்க நினைப்பது தெளிவாகியுள்ளது.