சபாஷ் சீனா.. நிலவில் எடுத்த பாறை துகள்களை சுமந்து.. பூமிக்கு வந்தடைந்தது "சேஞ்ச்5" விண்கலம்..!
சீன விண்கலம் சேஞ்ச்5 நிலவில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது
பெய்ஜிங்: கடந்த 24-ம் தேதி சீனாவில் இருந்து விண்கலம் ஒன்று நிலாவுக்கு அனுப்பப்பட்டது... அந்த விண்கலம் இப்போது நிலவில் எடுக்கப்பட்ட பாறை துகள்களுடன் பூமிக்கு திரும்பி இருக்கிறது.
நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகளை நடத்துவதற்காக "சேஞ்ச்5" என்ற விண்கலத்தை சீனா கடந்த 24-ந்தேதி விண்ணில் செலுத்தியது.
அது கடந்த 1ம் தேதியே நிலவை சென்றடைந்துவிட்டது.பிறகு, விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
விண்கலம்
அங்கிருந்த பாறைதுகள்கள், மண் மாதிரிகளை எடுத்து கொண்டு லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து கடந்த 3-ந்தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த "சேஞ்ச்5" என்ற விண்கலத்துடன் இணைக்கப்பட்டது. அந்த "சேஞ்ச்5" விண்கலம்தான் பூமியை நோக்கி புறப்பட்டு வந்துள்ளது.. இதை சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை
இது குறித்து அந்த அமைப்பு ஒருஅறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அதில், "நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது... அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிஷங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்ட பாதை பூமியை நோக்கி இன்று விடிகாலை திரும்பியது" என்று தெரிவித்துள்ளது.
ஆய்வு
அதன்படியே அந்த விண்கலம் இன்று விடிகாலை 1.30 மணியளவில் சீனாவின் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது... இதையடுத்து, அந்த விண்கலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவின் பாறை, கல் துகள்களை சேகரித்த சீன விண்வெளி விஞ்ஞானிகள் அதை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருமை
இதன்மூலம் நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த பெருமையை அமெரிக்காவும், ரஷ்யாவும் இப்படித்தான் விண்கலத்தை அனுப்பி நிலவிலிருந்து பாறைகள், மணல் போன்றவற்றை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தன. இப்போது 45 வருஷத்துக்கு பிறகு, சீனா இந்த பெருமையில் 3வதாக இணைந்துள்ளது.