தற்கொலை செய்யவிருந்த பெண்ணை தாவிக் குதித்து காப்பாற்றிய பஸ் டிரைவர்: வீடியோ இதோ
பெய்ஜிங்: சீனாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யவிருந்த பெண்ணை பேருந்து டிரைவர் ஒருவர் காப்பாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகர் நான்ஜிங்கில் ஓடுகிறது யாங்சே ஆறு. இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து யாங்சே ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். அவர் பாலத்தின் சுவரின் ஏறி நின்று கொண்டிருப்பதை அந்த வழியாக சென்ற பேருந்தின் டிரைவர் பியான் பெங்பை பார்த்தார்.
உடனே அவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்திவிட்டு தாவிக் குதித்துச் சென்று அந்த பெண்ணை பாலத்தின் சுவரில் இருந்து இறக்கினார். அந்த பெண்ணோ டிரைவரின் பிடியில் இருந்து விலகிச் சென்று ஆற்றில் குதிக்க முயன்றார். டிரைவரோ அந்த பெண்ணை மற்றும் ஒருவரின் உதவியோடு பேருந்தில் ஏற்றினார்.
அந்த பெண் தன்னை காப்பாற்றியவர்களை பார்த்து கத்தினார். கடந்த 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் அவரை விசாரித்துவிட்டு கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.