காற்றை விற்கும் கனடா வியாபாரிகள்.. பாட்டிலில் அடைத்து வாங்கும் பரிதாப சீனர்கள்!
பீஜிங்: காற்று மாசு அதிகரித்து விட்டதால், கனடா நிறுவனம் ஒன்றிடமிருந்து இருந்து சுத்தமான காற்று அடைக்கப்பட்ட பாட்டில்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது சீனா.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது சீனா. வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் வெளியேறுகின்ற புகை நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகிறது. இதுதவிர குளிர்காலத்தில் வீடுகளில் குளிர் காய்வதற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறுகிற புகையாலும் அங்கு காற்று கடும் மாசு அடைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவு தற்போது அங்கு பனிப்புகையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சீனர்கள் பெரும் அவஸ்தைக்கும், உடல் நலிவுக்கும் உள்ளாகி வருகிறார்கள்.
அபாய எச்சரிக்கை...
இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்திலேயே பெய்ஜிங்கில் காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
தூய்மையான காற்று...
இந்நிலையில், தொடர்ந்து மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிவரும் சீனமக்கள், தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கனடா நிறுவனம்...
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கனடா நாட்டு நிறுவனம் ஒன்று, அங்குள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
பாட்டிலில் காற்று...
பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள இந்த காற்று இந்திய மதிப்பின்படி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்று 10 மணி நேரம் வரை தூய்மையானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லிக்கும் வருமா...
டெல்லியும் இப்போது புகை மாசால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. எனவே கனடாக்காரர்கள் இங்கும் கிளை பரப்பி காற்றை விற்பார்களா என்று தெரியவில்லை.