ஒரு பிள்ளையை வளர்க்கவே நாக்கு தள்ளுது, 2வது வேண்டாம்: சீனர்கள்
பெய்ஜிங்: ஒரு குழந்தையை வளர்க்கவே போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதில் இரண்டாவது குழந்தை தேவை இல்லை என்று சீன பெற்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற சட்டத்தை சீனா தளர்த்தியுள்ளது. இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு சீனர்களை அரசு ஊக்குவிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் பெற்றோர்கள் வேறு விதமாக நினைக்கிறார்கள்.
ஒரு குழந்தையை வளர்க்கவே போதும் போதும் என்றாகிவிடுகிறது இந்நிலையில் இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறார்கள் பல தம்பதிகள்.
இது குறித்து நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த யாங் தாவ் மற்றும் அவரின் மனைவி ஜியா பெங் கூறுகையில்,
நாங்கள் இருவரும் பெய்ஜிங்கில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு 3 வயதில் யாங் இனூ என்ற மகள் உள்ளார். ஒரு குழந்தையை வளர்க்கவே சிரமப்படுகிறோம். இதில் இரண்டாவது குழந்தையை பற்றி நினைக்க முடியாது. இன்னும் ஒரு குழந்தையை வளர்க்க எங்களுக்கு பணமும், பொறுமையும் இல்லை என்றனர்.
வாங் ஜியூசாங் மற்றும் அவரின் மனைவி ஜோ இங் கூறுகையில்,
எங்களுக்கு 6 வயதில் வாங் டாங்லீ என்ற மகன் உள்ளார். ஒரு குழந்தை இருப்பதால் அதற்கு போதிய அளவில் செலவு செய்ய முடிகிறது. இதுவே இரண்டாவது குழந்தை பிறந்தால் டாங்லீக்கு செலவு செய்யும் பணத்தில் பாதி அந்த குழந்தைக்கு செலவு செய்ய வேண்டும். இதனால் இருவரையும் சரியான முறையில் வளர்க்க முடியாது என்கிறார்கள்.