சொத்துவரியில் தப்பிக்க... விவாகரத்து நாடகமாடும் சீனத் தம்பதிகள்: அதிர்ச்சித் தகவல்
பெய்ஜிங்: அரசு விவாகரத்துத் தம்பதிகளுக்கு அளிக்கும் சலுகையைப் பயன் படுத்த சீனத்தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு சீனாவில் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் தம்பதிகள், பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.
இதன் எதிரொலியாக சமீப காலமாக விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.
நாம் இருவர் நமக்கு ஒருவர்....
சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண் குழந்தை மோகம்....
அனைவரும் ஆண் குழந்தைகளை பெறவே விரும்புவதால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சீனாவில் மிகவும் குறைந்துவிட்டது. ஆகவே, திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருமண முறிவு...
இது ஒருபுறம் இருக்க சமீப காலமாக சீனாவில் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்தை முறித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சொத்து வரி....
ஷாங்காய் நகரிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அங்கு விதிக்கப்பட்டுள்ள அதிக அளவிலான சொத்து வரி தான் என சொல்லப் படுகிறது.
கூடுதல் வருவாய்...
சொத்து வரிக்கும், விவாகரத்துக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது. அங்கு வீடு மற்றும் குடியிருப்புகளை விற்பவர்கள் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
வரி விலக்கு....
அதே நேரத்தில் விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அவர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்கும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
சட்டத்தில் ஓட்டை...
சட்டத்தின் இந்த ஓட்டையை பயன்படுத்தி கொள்ள விவகாரத்து என்ற புதிய உத்தியை பின்பற்றத் தொடங்கியுள்ளனராம் சீன தம்பதிகள். இவ்வாறு விவகாரத்து செய்து கொள்பவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வசதியும் உள்ளது.
அதிகரிக்கும் விவாகரத்துகள்....
மேற்கூறிய காரணங்களால் சீனாவில் கடந்த 4 ஆண்டுகளை விட தற்போது விவகாரத்து அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.