உலகத்துலயே மோசமானது சீனாவோட தடுப்பூசிதான், 73 பக்கவிளைவு இருக்கு... பொரிந்து தள்ளும் சீன மருத்துவர்
பெய்ஜிங்: உலகிலேயே மோசமான தடுப்பூசி சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியாகத் தான் இருக்கும் என்று அந்நாட்டிலுள்ள மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனா இந்த பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டாலும்கூட மற்ற நாடுகள் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை நிறுத்த உலகின் பல நிறுவனங்களுக்கும் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்
சினோபார்ம் தடுப்பூசி
இதேபோல சீனாவும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. சீனா அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்தத் தடுப்பூசி சுமார் 79% வரை தடுப்பாற்றலை அளிப்பதாகச் சீனா கூறியுள்ளது. சீனாவில் தற்போது வரை சுமார் 30 லட்சம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
மோசமான தடுப்பூசி
இந்நிலையில், ஷாங்காயை சேர்ந்த டாக்டர் தாவோ லினா, இரு நாட்களுக்கு முன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் சினோபார்ம் தடுப்பூசி மிகவும் மோசமானது என்று பதிவிட்டிருந்தார். கொரோனா தடுப்பூசி வல்லுநராக இவர், உலகிலேயே மிகவும் பாதுகாப்பற்ற தடுப்பூசி சினோபார்ம் தடுப்பூசி என்றும் இந்த தடுப்பூசியால் சுமார் 73 பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் பதிவிட்டிருந்தார்.
திடீர் மாயம்
அவரது இந்த பதிவு உடனடியாக வைரலானது. சர்வதேச ஊடகங்கள் பலரும் இது குறித்த செய்தியை வெளியிட்டன. அதைத்தொடர்ந்து அந்த பதிவு திடீரென்று தாவோ லினாவின் சமூக வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.
நான் அப்படி சொல்லவே இல்லை
இந்நிலையில், தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகத் தாவோ லினா தற்போது கூறியுள்ளார். தான் கிண்டலாக எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். உலகிலுள்ள எந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டாலும் பக்கவிளைவுகள் இருக்கும் என்று தெரிவித்த அவர், சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அதன் முதல் டோஸை தான் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மறுப்பு
இருப்பினும், சீன தடுப்பூசி குறித்த தனது கருத்திற்கு தாவோ வினா மறுப்பு தெரிவித்துள்ளதைச் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவில் முதலில் கொரோனா பரவல் ஏற்பட்டபோது, அது குறித்து எச்சரிக்கை செய்த மருத்துவரை அந்நாட்டு அரசு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.