நேபாளத்தில் பிரதமர் ஒலியை காப்பாற்ற ஒட்டு போடும் சீனா... மீண்டும் கூட்டம் ஒத்தி வைப்பு!!
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று நடக்கவிருந்த ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு கமிட்டிக் கூட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பிரதமர் கேபி சர்மா ஒலிக்கு ஆதரவாக அழுத்தம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், மழை பெய்து நிலச்சரிவு காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Recommended Video
நேபாளம் பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் தலைவர் புஷ்ப கமல் தஹல் போர்க் கொடி உயர்த்தியுள்ளார். நிலைக்குழு கமிட்டியில் இருக்கும் 44 உறுப்பினர்களில் 31 பேர் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நிலைக்குழு கமிட்டி கூடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேபாளத்தில் மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், கூட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கூட்டத்தை தள்ளி வைக்கக் கூடாது என்று நேற்று இரவு வரை புஷ்ப கமல் தஹல் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இறுதியில் இவரை கட்சியின் மூத்த தலைவர்களான மாதவ் நேபாள், ஜலநாத் கண்டல் சந்தித்த பின்னர் ஒத்தி வைப்பதற்கு புஷ்ப கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்திய தனியார் டிவி சேனல்களை நேபாளத்தில் ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று நேற்று இரவு அந்த நாட்டின் பிரதமர் சர்மா ஒலி உத்தரவு பிறப்பித்து இருந்தார். தூர்தர்ஷனுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த நாட்டில் தனியார் சேனல்களை கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் தடை செய்தனர். இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பினால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதை ஒலி உணர்ந்து வைத்து இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டு வருகிறார்.
தொடர்ந்து புஷ்ப கமல் தஹலை நேபாளத்துக்கான சீன தூதர் ஹவ் யாங்கி சந்திக்க முயற்சித்துள்ளார். ஆனால், புஷ்ப கமலுக்கு விருப்பமில்லை. இதற்கு முன்னதாக பீஜிங்கின் அரசியல் நிலைப்பாடு, குறிக்கோள்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் புஷ்ப கமல் ஆர்வத்துடன் இருந்துள்ளார். மேலும் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் பிரதமர்களுமான மாதவ் குமார் நேபாள், ஜலநாத் கனல் ஆகியோரின் முடிவுகளையும் அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சீனாவில் இருந்து வந்த அழுத்தத்தை அடுத்து சீன தூதரை புஷ்ப கமல் சந்திக்க ஒப்புக் கொண்டு நிலைக்குழு கமிட்டியை ஒத்தி வைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
வாழ்வும் வளமும் மங்காத தமிழென்று வாழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன்.. கவிஞர் கலாப்ரியா
பிரதமர் பதவியில் இருந்து ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு நடந்தால்தான் நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வாய்ப்பு இருக்கிறது என்றும் சீனாவுடன் நீண்ட நாள் உறவுக்கு நல்லது என்றும் புஷ்ப கமல் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதேசமயம், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி உடையக் கூடாது என்றும் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும் சீன தூதர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியை தனது கையில் வைத்து இருக்க வேண்டும் என்று சீனா அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறது. தற்போது பிரதமர் ஒலிக்கு எதிராக புஷ்ப கமல்தான் உரத்த குரலை ஒலித்து வருகிறார். நேபாளத்தில் நிலையற்ற ஆட்சியில் சீனாவின் தலையீடு இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. இது டெல்லிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.