மனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்
சீனாவில் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்று 100 நாட்கள் மிகப்பெரிய ப்ரீசரில் வைத்து நாடகமாடிய கணவனுக்கு ஷாங்காய் நீதிமன்றம் மரணதண்டனையை பரிசளித்துள்ளது.
பீஜிங்: கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு வெளிப்படும் என்பார்கள். சீனாவில் மனைவியை கொலை செய்து விட்டு நூறு நாட்களுக்கு மேல் அதை மறைக்க பல பொய்களைச் சொல்லி நாடகம் போட்ட நபர் ஒருவர் கடைசியில் சிக்கிக்கொண்டார். ஓராண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இந்த வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து ஷாங்காய் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மனைவியை கொன்ற நபரின் பெயர் ஜூ சியாயோங், 30 வயதாகும் இந்த நபர் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு யாங் லிப்பிங் என்ற பெண்ணுடன் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அழகான அந்தப்பெண் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். பெற்றோர்களுக்கு ஒரே பெண் குழந்தையான அவர் தனது சம்பாத்யம் முழுவதையும் தனது வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருந்தார்.
பத்து பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் எலியும் பூனையுமாக தினசரியும் சண்டைதான். திருமணம் முடிந்து பத்து மாதத்தில் பிள்ளை பிறக்கும் என்பார்கள், ஜூ சியாயோங் வாழ்க்கையில் நடந்ததோ வேறு.
கொன்று மறைத்த கணவன்
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம் போல கணவன் மனைவி சண்டை தொடங்கியது. வாக்கு வாதம் முற்றியது. ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்தான். கொலை செய்த மனைவியை மறைத்து வைக்கவே மிகப்பெரிய ப்ரீசரை வாங்கினான்.
பொய் சொல்லி தப்பித்தான்
எதற்கு இத்தனை பெரிய ப்ரீசர் என்று அக்கம் பக்கத்தினர் கேட்டதற்கு பெட் விலங்குகளுக்கு கறி வாங்கி சேமித்து வைப்பதற்காக வாங்குகிறேன் என்று கூசாமல் பொய் சொன்னான். ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாக மனைவி உடலை ப்ரீசருக்குள் வைத்திருந்தான். மனைவியைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் அம்மா வீட்டிற்கு போயிருப்பதாக சொல்லி நம்ப வைத்தான்.
மனைவி பணத்தில் உல்லாசம்
மனைவியின் சமூக வலைத்தள பக்கங்களை ஓபன் செய்து வைத்துக்கொண்டு உறவிர்கள், பெற்றோர்கள் சாட் செய்தால் அதற்கு அந்த பெண்ணை போலவே பதில் சொல்லுவார். பல நகரங்களுக்கு இன்பச்சுற்றலா சென்றுள்ளார். தென்கொரியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் சென்றுள்ளார். மனைவியின் கிரெடிட் கார்ட் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதோடு தினசரி செலவுகளையும் செய்துள்ளார். மனைவியின் ஐடி கார்ட் மூலம் வேறொரு பொண்ணை அழைத்துப்போய் ஹோட்டலில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு வெளிப்படும் என்பார்கள். கொலை செய்து விட்டு நூறு நாட்களுக்கு மேல் அதை மறைத்த அந்த நபரால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. ஒருநாள் மாமனாரின் பிறந்தநாள் பார்ட்டி டின்னருக்கு அழைப்பு வந்தது மனைவியின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. மனைவியை அழைத்து போக வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்த அவர், வேறு வழியின்றி போலீசில் சரணடைந்து உண்மையை ஒத்துக்கொண்டார்.
மரண தண்டனை பரிசு
இந்த வழக்கு கடந்த ஓராண்டு காலமாக சீனாவின் ஷாங்காய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனாலும் அசராமல் மேல் முறையீடு செய்தார் ஜூ சியாயோங். ஆனால் தீர்ப்பை மாற்ற முடியாது என்று உறுதியாக கூறிய நீதிபதிகள் ஜூவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்துள்ளனர். சீனாவில் மனைவியை கொன்றால் மரண தண்டனை. நம் ஊரிலோ சில ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு வந்து மீண்டும் புது மாப்பிள்ளை வேஷம் போட்டு வேறு திருமணம் செய்து கொள்வார்கள்.