பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள்
சுவா, பிஜி: பிஜி தீவில் சீன தூதரக அதிகாரிகளுக்கும், தைவான் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பெரும் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.
சீனா, தைவானை தனி நாடாக கூறுவதில்லை. மாறாக தனது ஒருங்கிணைந்த பகுதியாக கூறிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து தைவானும் சர்வதேச அரங்கில் பலவிதமாக போராடிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இரு தரப்பும் தொடர்ந்து மோதிக் கொண்டே உள்ளன. இந்த நிலையில் பிஜியில் வைத்து இரு தரப்பு அதிகாரிகளுக்கும் சரமாரியான சண்டை நடந்துள்ளது.
பிஜி தலைநகர் சுவாவில் உள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலில் அக்டோபர் 8ம் தேதி தைவான் நாட்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இது சீன தூதரக அதிகாரிகளை கோபப்படுத்தி விட்டது. உடனடியாக ஒரு அதிகாரிகள் குழு கிளம்பி விழா நடந்த இடத்துக்குப் போயுள்ளது. அங்கு சென்ற சீன அதிகாரிகள், தைவான் அதிகாரிகளுடன் கடும் மோதலில் இறங்கினர். இந்த விழாவை நடத்தக் கூடாது என்று அவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இரு தரப்பையும் சமாதானப்படுத்த விழாவுக்கு வந்திருந்த பிற நாட்டு அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. திடீரென சீன அதிகாரிகள் கொலை வெறித் தாக்குதலில் குதித்தனர். தைவான் அதிகாரிகளை சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர். இதில் ஒரு தைவான் அதிகாரி படுகாயமடைந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர். அங்கு கொண்டு போய் அவரை சேர்த்தனர்.
இந்த விழாவில் பல்வேறு நாட்டு தூதர்கள், பிஜி நாட்டு அமைச்சர்கள், பல்வேறு தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அத்தனை பேரும் பார்க்க, சீன அதிகாரிகள் போட்ட இந்த வெறியாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் சீன அதிகாரிகள் தங்களுக்கு தூதரக அதிகாரிகள் என்பதால் போலீஸ் நடவடிக்கையிலிருந்து விலக்கு இருப்பதாக கூறி அங்கிருந்து போய் விட்டனர். போலீஸாரும் கைது நடவடிக்கை உள்ளிட்டவற்றை எடுக்க முடியாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே தைவான் அதிகாரி ஒருவர் மீது சீன தூதரகம் சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் நுழைய முயன்றபோது தங்களது அதிகாரிகளை தைவான் தரப்பினர் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், பிஜி போலீஸார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் விட்டது தொடர்பாக பிஜி நாட்டு தூதரகத்தில் தைவான் தூதரகமும் அதிருப்தி தெரிவித்து புகார் கொடுத்துள்ளது. தங்களது அதிகாரிகள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தைவான் கோரிக்கை விடுத்துள்ளது.