பத்தரமா ஊருக்கு போகணும் சாமீ... இன்ஜினில் வேண்டுதல் காசு போட்ட சீனா பாட்டியால் விமானத்தில் கோளாறு!
சீனாவில் விமானத்தின் என்ஜினில் சில்லரை நாணயங்களை போட்டு சாமியிடம் பிரார்த்தனை செய்த மூதாட்டியால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
பீய்ஜிங் : சீனாவில் விமானத்தின் என்ஜினில் மூதாட்டி ஒருவர் சில்லறை நாணயங்களை வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
சீனாவின் சர்வதேச விமான நிலையத்தில் சீனா தெற்கு விமானம் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஷாங்காய் மாநகரில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவான்சோவுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறால் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர்.
CZ380 விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது என்ஜினில் இருந்து ஒன்பது சில்லறை நாணயங்கள் கிடைத்துள்ளன.
குழப்பம்
என்ஜினில் எப்படி சில்லறை காசுகள் வந்தது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போயினர். அப்போது சக பயணி ஒருவர் 80 வயது மூதாட்டி சில்லறை காசுகளை வீசியதைப் பார்த்தாக தெரிவித்தார்.
சாமியிடம் வேண்டுதல்
இதனையடுத்து க்யூயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தன்னுடைய கணவர், மகள் மருமகளுடன் விமானத்தில் சென்றுள்ள க்யூய் பயணம் நல்ல முறையில் அமைவதற்காக 9 சில்லரை நாணயங்களை வீசியதை ஒப்புகொண்டுள்ளார்.
விளக்கம்
க்யூய் வீசிய 9 நாணயங்களில் ஒரு நாணயம் என்ஜினில் சிக்கியதால் 150 பயணிகள் அவதியடைந்தனர். எனினும் பாதுகாப்பான ஒரு பயணத்துக்காக பிரார்த்தனை செய்தே சில்லறை நாணயங்களை வீசியதாக தன்னுடைய செய்கைக்கான விளக்கத்தையும் பாட்டி கொடுத்துள்ளார்.
சதியில்லை
அவர் திட்டமிட்டு சதி செய்யும் நோக்கில் இந்தச் செயலை செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறினர். மற்றபடி அவர் மீது எந்த ஒரு குற்ற நடவடிக்கைகள் இல்லை, மனநலம் பாதிக்கப்பட்டவரும் இல்லை என்று விமான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடநம்பிக்கை
விமான என்ஜினில் சில்லறை நாணயங்கள் எடுக்கப்பட்டதையடுத்து 150 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. புத்த மத வழக்கத்தை தீவிரமாக பின்பற்றும் க்யூய் தனது மத நம்பிக்கை காரணமாக இந்தச் செயலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.