மாமல்லபுரம் வந்து இளநீர் சாப்பிட்டுட்டுப் போன ஜின்பிங்கா இது... என்னா ஒரு கோபாவேசம்!
Recommended Video
பெய்ஜிங்: சீனாவைத் துண்டாட யாராவது நினைத்தால் அவர்களை அழித்து விடுவோம்.. உடல்களை நசுக்கி விடுவோம். எலும்புகளைப் பொடிப் பொடியாக்கி பூமியில் தூவி விடுவோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
ஹாங்காங்கில் கடந்த பல மாதங்களாக சீன அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சீன போலீஸாரும், ராணுவத்தினரும் என்னென்னவோ செய்து பார்க்கின்றனர். ஆனால் போராட்டத்தை அடக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் போராட்டக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜின்பிங்.
இதுகுறித்து ஜின்பிங் கூறியதாக சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவைத் துண்டாட யாரேனும் நினைத்தால் அவர்களது எலும்புகள் முறிக்கப்பட்டு பொசுக்கப்படும். சாம்பலை பூமியில் தூவி விடுவோம். அவர்களது உடல்கள் நசுக்கப்படும்.
கடும் எச்சரிக்கை
சீனாவைத் துண்டாடி வேடிக்கை பார்க்கலாம் என யாராவது வெளியிலிருந்து முயற்சி செய்தால் சீன மக்களின் கடும் கோபத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என்று ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
இரண்டு தலைவலி
சீனாவுக்கு உண்மையில் இரட்டைத் தலைவலி உள்ளது. ஒன்று ஹாங்காங். இன்னொன்று தைவான். இந்த இரண்டையும் கடுமையாக எச்சரிக்கும் வகையில்தான் ஜின்பிங் இப்படி கடும் ஆவேசமாக பேசியிருப்பதாக தெரிகிறது.
போராட்டம் தீவிரம்
ஹாங்காங்கில் போராட்டம் நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. ஹாங்காங்கில் முற்றிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போராட்டமாக இருக்கிறது. ஊர்வலங்கள், திடீர் திடீரென நடக்கும் தாக்குதல்கள் என ஹாங்காங்கே பதட்டமாக இருக்கிறது.
சீன அரசு திணறல்
இந்தப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் சீனா திணறி வருகிறது. ஹாங்காங் போலீஸாரே இதுவரை போராட்டக்காரர்களை சமாளித்து வருகின்றனர். ராணுவத்தை இதுவரை பெரிய அளவில் சீனா பயன்படுத்தாமல் உள்ளது. அதேசமயம், 1989ம் ஆண்டு சீனாவின் தியானன்மன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோரை சீன ராணுவம் சுட்டுக் கொன்றது போன்ற நிகழ்வுக்கு வாய்ப்பிருப்பதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது ஜின்பிங் பேசுவதை பார்த்தால் அப்படி நடந்து விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மாமல்லபுரத்திற்குப் போய் கூலாக இளநீர் சாப்பிட்டுட்டு சிரிச்ச முகத்துடன் வந்து போன ஜின்பிங்கா இது என்று நமக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு!