இந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்!
Recommended Video
பிஷ்கேக்: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சீன அதிபர் ஜீ ஜின்பிங், இந்த வருடத்தின் இறுதியில் இந்தியா வருவதற்கு சம்மதித்துள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங்கை இன்று மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தருமாறு ஜி ஜின்பிங்கை மோடி அழைத்ததாகவும், இதற்கு ஒப்புக் கொண்டுள்ள சீன அதிபர், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருவார் என்றும், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், விஜய் கோகலே தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவே பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், கடந்த சில வருடங்களாக இரு நாடுகளும் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற உஹான் உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடியும், ஜீ ஜின்பிங்கும், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். அப்போது சீன நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவுடன் நட்பை பேணுவதற்கு சீனா விரும்புவதாகவும், இரு நாடுகள் நடுவே இன்னும் அதிக நட்பும், பரஸ்பர நம்பிக்கையும் ஏற்பட்டால், எல்லை பிரச்சனை உள்ளிட்டவற்றுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த பத்திரிக்கை, பொதுவாக இந்தியாவுக்கு எதிராக துவேஷத்தை வெளிப்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடும் என்பது கவனிக்கத்தக்கது.
பிஷ்கேக் நகரில் இன்று நடைபெற்ற சீன அதிபர் மற்றும் மோடி நடுவேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்துள்ளது. இதில், இருவரும் முக்கியமான பல விஷயங்கள் பற்றி பேசியதாக விஜய் தெரிவித்துள்ளார்.