கொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து!
பெய்ஜிங்: கொரோனா வைரஸை உலகிற்கு பரப்பியதாக தன் மீது நீண்டகாலமாக உள்ள குற்றச்சாட்டை மாற்றும் முயற்சியாக இந்தியா மீது அபாண்டமாக பழி போட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறிய ஆராய்ச்சியாளர்கள், இந்த கொடிய வைரஸ் இந்தியாவில் தோன்றியதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2019ம் ஆண்டு கோடைக்காலத்தில் மனிதர்கள், விலங்குகள் அசுத்தமான ஒரே தண்ணீரை குடித்ததால் இந்தியாவில் வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று சீன அறிவியல் அகாடமியின் குழு பொய்யான வாதத்தை முன்வைத்துள்ளது. இந்தியாவில் தோன்றி அது கவனிக்கப்படாமல் வுஹானுக்கு பயணித்து இருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
முன்னதாக சீன அதிகாரிகள் இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் பழி போட்டார்கள். இப்போது
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்த அரசியல் பதட்டங்களுக்கு பின்னணியில் இப்படி ஒரு பழியை சீனா இந்தியா மீது போட்டுள்ளது.
பைலோஜெனடிக்
கொரோனா வைரஸ் (கோவிட் -19)இன் தோற்றத்தை அறிய சீன குழு பைலோஜெனடிக் பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது. வைரஸ்கள், எல்லா உயிரணுக்களையும் போலவே, அவை இனப்பெருக்கம் செய்யும்போது உருமாறும், அதாவது ஒவ்வொரு முறையும் தங்களை பிரதிபலிக்கும் போது அவற்றின் டி.என்.ஏவில் சிறிய மாற்றங்கள் நிகழ்கின்றன.
நகல் வைரஸ்
விஞ்ஞானிகள் வுஹானில் காணப்படும் வைரஸை 'அசல்' வைரஸ் என்று சொல்வதை நிராகரிக்கின்றனர், அதற்கு பதிலாக வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷ்யா அல்லது செர்பியா ஆகிய எட்டு நாடுகளில் உள்ளவை தான் அசல் வைரஸ் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்டை நாடுகள்
இந்தியா மற்றும் வங்கதேசம் இரண்டும் குறைந்த பிறழ்வுகளுடன் மாதிரிகள் பதிவுசெய்திருப்பதாலும், புவியியல் ரீதியாக அண்டை நாடுகளாகவும் இருப்பதாலும், அங்கு முதல் தொற்று நிகழ்ந்திருக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர்.
எப்படி சொல்கிறார்கள்
சீன ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி கூறுகையில்: "நீர் பற்றாக்குறையால் குரங்குகள் போன்ற காட்டு விலங்குகள் ஒருவருக்கொருவர் தண்ணீருக்கு எதிரான மோசமான சண்டையில் ஈடுபடுகின்றன இது நிச்சயமாக மனித-காட்டு விலங்குகளின் தொடர்புகளின் வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் விலங்கு மூலம் மனிதர்களுக்கு SARS-CoV-2 இன் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கும். இப்படி பரவ ஒருவித அசாதாரண வெப்ப அலை தொடர்பு காரணமாக இருக்கலாம். இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு உள்ளது. இளைஞர்கள் பலர் பல மாதங்களாக வைரஸ் கண்டறியப்படாமல் பரவ அனுமதித்திருக்கிறார்கள்" என்று பழிபோடுகிறார்கள்.
கடல் சந்தை
இப்படி பொய்யான குற்றச்சாட்டுகள் பலவற்றை சீனா முன்வைத்தாலும் உலகமே இன்று வரை நம்பவுது கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றியது என்பதை தான். வுகான் கடல் உணவு சந்தையில் 'அறியப்படாத மர்மமான நிமோனியா' கொத்துகொத்தாக கொரோனா பரவ காரணமாக இருந்தது.
சீனாவில் தோன்றவில்லை
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று சீன அரசு ஊடகங்கள் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த உணவு பேக்கேஜிங் மற்றும் விஞ்ஞான ஆவணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான படிமங்கள் இருப்பதை மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸ் சீனாவைவிட ஐரோப்பாவில் தான் மிகவேகமாக பரவியிருக்கிறது என்றும் இதன் மூலம், சீனாவில் கொரோனா தோன்றவில்லை என்பது உறுதியாகிறது என்று கூறின.
ஊகமானது
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அவசர நிபுணர் மைக் ரியான் வெள்ளிக்கிழமை அன்று ஜெனிவாவில் பேசுகையில், கொரோனா வைரஸ் சீனாவில் வெளிவரவில்லை என்று சொல்வது "மிகவும் ஊகமானது" என்று திட்டவட்டமாக மறுத்தார்.