குழந்தைகள், குடும்ப பெண்கள், தீவிரவாதிகள் என 17 பேரை குண்டு வைத்து கொன்ற சீன ராணுவம்
பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பேருடன் சேர்த்து அவர்களின் குடும்பத்தாரையும் பாதுகாப்பு படையினர் கொலை செய்துள்ளனர்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 50 பேர் பலியாகினர். இந்த வழக்கில் போலீசார் காஞ்சி டவுன்ஷிப்பைச் சேர்ந்த டர்சுன் ஜூம்(46), மூஸா(47), மெமத் ஈஸா(60) ஆகியோரை தேடி வந்தனர்.
சம்பவத்திற்கு பிறகு அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் அந்த மூன்று பேரும் ஒரு குகையில் பதுங்கியிருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு சென்று குகைக்கு வெடிவைத்ததில் அந்த 3 பேருடன் சேர்ந்து அவர்களின் குடும்பத்தாரும் பலியாகியுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த தாக்குதலில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் ஈஸாவின் 9 வயது தத்துப் பேத்தி, ஜூமின் 1, 6 வயது பேரன்கள், ஜூமின் 44 வயது மனைவி, ஈஸாவின் 55 வயது மனைவி மற்றும் 2 மருமகள்களும் பலியாகியுள்ளனர்.
குழந்தைகளும், பெண்களும் எந்த தீவிரவாத செயலிலும் ஈடுபடவில்லை. குடும்பத் தலைவர்களுடன் இருந்த காரணத்தால் பலியாகியுள்ளனர்.