கிரீஸை போல திவாலாக காத்திருக்கு சீனா.. இந்தியாவுக்கும் பொருளாதார நெருக்கடி!
பீஜிங்: கிரீஸ் நாட்டை தொடர்ந்து சீன பொருளாதாராம் அதளபாதாளம் நோக்கி பாய்ந்து கொண்டுள்ளது. சீன பங்கு சந்தையில் பெரும் சரிவு கண்டு வருவதால், அந்த நாட்டு கரென்சியான, யென், அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக குறைந்துள்ளது. இந்த நெருக்கடி, இந்திய பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர்.
பங்கு சந்தை சரிவு
ஷாங்காய் பங்கு சந்தையில் நேற்று திடீரென 8 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்தது. முன்னணி நிறுவனங்கள் எல்லாம் பங்கு பேரத்தை நடத்த தயங்கின. சுமார் 43 சதவீத கம்பெனிகள் (1249 நிறுவனங்கள்), இந்த சரிவால் பயந்து போய் பங்கு பேரத்தை மணிக்கணக்கில் நிறுத்தி வைத்தன. சீன பங்கு சந்தை சரிவை பார்க்கும்போது, கிரீஸ் போல இங்கும் பொருளாதார சரிவு ஆரம்பித்து விட்டதா என்ற எண்ணத்தை உருவாக்கியது.
இறங்கி வந்த சீனா
உலக நாடுகள் ஒத்துழைப்பை தவிர்த்து தன்னிச்சையாக செயல்பட விரும்பிய சீனா, 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தத்தை தொடர்ந்து, ஒத்துழைப்பு கொடுக்க இறங்கி வந்தது. எனினும், உள்நாட்டு பங்கு வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் உஷாராக இருந்தது. ஆனால், அதிலும், இப்போது பெரும் அடி விழுந்துள்ளது.
முயற்சி வீண்
கடந்த ஒரு வாரமாக தள்ளாட்டத்தில் இருந்த சீன பங்குச் சந்தையில் நேற்று மட்டும் 8 சதவீதம் பங்கு மதிப்பு சரிந்தது. பங்குச்சந்தை சரிவை தடுக்க காப்பீட்டு கம்பெனிகள் தங்களின் 10 சதவீத பங்குகளை மற்ற கம்பெனிகளில் முதலீடு செய்தன. இருந்தும் பங்கு மதிப்பு சரிவை தடுக்க இது பெரிதும் பயன்படவில்லை. வெளிநாட்டு நிறுவன பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை திரும்ப பெறுவதை தடுக்க முடியவில்லை.
பண மதிப்பு சரிவு
பங்கு மதிப்பு சரிந்ததை தொடர்ந்து சீன யென் கரன்சி மதிப்பும் எதிர்பாராத சரிவை கண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக யென் மதிப்பு சரிந்து வருவதும் சீன அரசுக்கு கவலையை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் முதலே சீன பொருளாதார நிலை தள்ளாடி வருகிறது. மொத்தத்தில் பங்கு சந்தையில் 30 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி காணப்படும் என்ற நிலை தான் இப்போது இருந்து வருகிறது.
இந்தியாவுக்கும் ஆபத்து
இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், கிரீசை விட ஆபத்தான நிலைமைக்கு, சீனா போய்க்கொண்டுள்ளது. சீனாவுடன் பல நாடுகளும் பொருளாதார தொடர்பை வைத்துள்ளன. அந்த நாடுகளுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்தியாவை பொருத்தளவில், உள்நாட்டில் சந்தை பொருட்களின் விலைவாசி கட்டுக்குள் இருப்பது சாதகமான அம்சம். ஆனால், கிரீஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார சரிவு, இந்தியாவுக்கு இரட்டை அபாயம். இந்திய பண மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர்.