சீனாவில் ஒரு மாதமாக லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த 43 வயது பெண் பலி
பெய்ஜிங்: சீனாவில் லிப்ட்டில் ஒரு மாதமாக சிக்கித் தவித்த பெண் உணவு, நீரின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
சீனாவின் கவோலிங் மாவட்டத்தில் உள்ள ஜியான் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி லிப்ட் செயல் இழந்துள்ளது. இதையடுத்து லிப்ட்டை சரி செய்யும் ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வந்து லிப்ட்டுக்குள் யாராவது இருக்கிறீர்களா என்று மட்டும் சத்தமாக கேட்டுவிட்டு அதன் சுவிட்ச்சை ஆப் செய்துவிட்டனர். குடியிருப்பில் உள்ளவர்களை அங்கிருக்கும் மற்றொரு லிப்ட்டை பயன்படுத்துமாறு தெரிவித்தனர்.
சீன புத்தாண்டை கொண்டாடச் சென்ற அவர்கள் கடந்த 1ம் தேதி தான் பணிக்கு திரும்பி வந்து அந்த லிப்ட்டை சரி செய்ய அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.
லிப்ட்டை சரி செய்தபோது தான் அதில் 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த பெண் லிப்ட்டில் இருந்தது தெரியாமல் அதன் சுவிட்ச்சை ஆப் செய்துள்ளனர்.
அந்த பெண் லிப்ட்டுக்குள் சிக்கி உணவில்லாமல் தவித்து பலியாகியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லிப்ட் ரிப்பேர் செய்யும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
லிப்ட்டில் பலியான அந்த பெண் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தார் எப்போதாவது தான் வந்து அவரை பார்ப்பார்கள். அதனால் இந்த ஒரு மாதமும் அவரை யாரும் தேடவில்லை.