கடன் தொல்லை.. 30 வயசு தோற்றத்துக்கு "மாறி" தப்ப முயன்ற 59 வயது பாட்டி!
ஷாங்காய்: சீனாவில் 59 வயது பெண்மணி ஒருவர் தனது கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தன்னை 30 வயது தோற்றத்துக்கு மாற்ற முயன்று சிக்கியுள்ளார்.
வுஹான் என்ற நகரைச் சேர்ந்தவர் இப்பெண்மணி. இவருக்கு கிட்டத்தட்ட 30.71 லட்சம் டாலர் அளவுக்கு கடன் இருக்கிறது. இதிலிருந்த தப்பும் யோசனையில் குதித்தார் அப்பெண்.
இதற்காக அவர் மேற்கொண்ட வழி படு தில்லாலங்கடியானது. அதாவது தனது உருவத்தையே மாற்றி தப்பிக்க முயன்றார் இப்பெண். பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் இதை செய்ய முயன்று தற்போது சிக்கியுள்ளார்.
சீனாவில் கடன் தொல்லை அதிகம். அதாவது கடன் வாங்கியோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதிலிருந்து தப்பி டிசைன் டிசைனாக வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் கடன் வாங்கியோர். அதில் ஒருவர்தான் இந்தப் பெண்.
இந்தப் பெண் தான் வாங்கிய கடனிலிருந்து தப்பிக்க வுஹான் நகருக்கு தப்பி விட்டார். இதையடுத்து அவரைக் கைது செய்ய கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவர்களிடம் இருந்த கைது வாரண்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணுக்கு வயது 59. ஆனால் அவர்களிடம் சிக்கியதோ 30 வயதுப் பெண்.
விசாரணையில்தான் அப்பெண் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தன்னை மாற்றிக் கொண்ட நூதன திருட்டுத்தனத்தைக் கண்டுபிடித்தனர். அப்பெண்ணின் பெயர் ஜூ நஜுவான். விசாரணையின்போதுதான் தான் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தன்னை மாற்றிக் கொண்டதாக அப்பெண் கூறியுள்ளார்.
இந்த அறுவைச் சிகிச்சைக்கும் கூட அவர் வங்கியிலிருந்து கடன் வாங்கி அதை பயன்படுத்தியுள்ளார். அந்த வங்கிக் கடனையும் கூட அவர் கட்டவில்லையாம்.
வாவ் ஐடியால்ல!