வைரமுத்து மீதான குற்றச்சாட்டு.. சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? மனம் திறந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
Recommended Video
ஜெனிவா: வைரமுத்து மீதான அவதூறுகளை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, சுவிட்சர்லாந்தில் கவிஞர் வைரமுத்து மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
சுவிஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது, வைரமுத்து தனது அறைக்கு தன்னை, அழைத்ததாக சின்மயி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், அப்படி ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கவில்லை என்ற தகவலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதை பாருங்கள்:
சமூக ஊடகங்களில் சாதனையாளர்களை சர்ச்சைக்குள்ளாக்குவது சகஜமாகிவிட்டது. பாடகி சின்மயி, கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். வீழ மாட்டோம் என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற வகையில், எனது நியாயத்தை முன் வைக்க வேண்டியது வரலாற்று கடமை.
[பாலியல் தொல்லையால் பல பாடகிகள் பாதிப்பு- சின்மயி பரபர புகார்]
பணம் பெறாத வைரமுத்து
ஈழ சுனாமி பாடல் உருவாக்கத்தின்போது, தமிழர்கள் மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்தால், அந்த படைப்பிற்காகவோ, நிகழ்விற்காகவோ, ஒரு பைசாவும் பெறாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த பெருமை வைரமுத்துவை சாரும். சின்மயி, அவர் தாயார், மாணிக்க விநாயகம், உன்னி மேனன் போன்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற சின்மயி, மாணிக்க விநாயகம், சின்மயி தாயார், இனியவன் ஆகிய நால்வரும் எனது வீட்டிலும்தான் தங்கியிருந்தனர்.
வேறு பகுதிகள்
உன்னிமேனன் வேறு மாநில விடுதியிலும், வைரமுத்து, லுசன் மாநிலத்திலுள்ள விடுதியில் தங்கியிருந்தார். எங்கள் வீட்டிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் அந்த நகரம் உள்ளது. 2 நாட்கள் விழா நடைபெற்றதும், வைரமுத்து கிளம்பி சென்றார். ஆனால், இவர்கள் ஒரு வாரம் தங்கிவிட்டுதான் சென்றார். வைரமுத்து மூன்று முறை சுவிட்சர்லாந்து வந்துள்ளார்.
குழந்தை மனதுக்காரர்
வைரமுத்துவை சந்திப்பது மிகவும் கடினம். அவர் ஒரு குழந்தை மனதுள்ள ஒரு மனிதர். வெளியில் மழை பெய்தால் ஓடிப்போய் நனைகிற பக்குவம், நதியோடு இருந்து உறவாடும் பக்குவம் என இயற்கையை ரசிக்க மட்டுமே சுவிஸ் மண்ணுக்கு வருகிறார். மூன்று நான்கு முறை இந்த மண்ணிற்கு வந்துள்ளபோதிலும், ஒரு நாள் மட்டுமே 1 மணி நேரம் இரவு உணவுக்காக எனது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். நாம் அவரை சந்திப்பதே மிகவும் கடினம்.
இயற்கை ரசிகன்
அவர் தனிமையில் இருப்பதையே விரும்புவர். யாரோடும் பேசுவதற்கும் நேரத்தை ஒதுக்காமல், இயற்கையை ரசித்து, மனதிலே ஒரு தவம் இருந்து இயற்கையை மனதிலே உள்வாங்கிச் செல்பவர்தான் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. நிகழ்ச்சி முடிந்ததும், சின்மயி எங்கள் வாகனத்தில் எனது மனைவியோடு எங்கள் வீட்டுக்கு வந்தனர். சின்மயி கேட்ட சம்பளத்தைவிடவும் கூடுதலாகவே கொடுத்து அனுப்பி வைத்தோம். அவருக்கு இந்த பாலியல் சீண்டல் போன்ற சொற்களை பயன்படுத்துவது இலகுவாக இருக்கலாம். ஆனால் புலம் பெயர் தமிழர்களான எங்களுக்கு அது சாதாரண வார்த்தை இல்லை.
தகாத வார்த்தை
7 முறை தேசிய விருது பெற்றுத் தந்த உயரிய கவிஞர், எவரெஸ்ட் சிகரமாக தமிழ் சமூகம் பார்க்கும் உயர்ந்த மனிதர் வேண்டுமானால் உங்கள் சர்ச்சைகளை தூசியாக தட்டிவிட்டு செல்லலாம். ஆனால் புலம் பெயர் தமிழர்களான நாங்கள் கடும் கோபத்தோடு உள்ளோம். உங்களோடு இப்படியான சர்ச்சைகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என சின்மயிக்கு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தகாத வார்த்தை பிரயோகங்களை கவிப்பேரரசு மீதோ, எம்மீதோ பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கையோடு சொல்லிக்கொள்கிறேன். தமிழ் படைப்பாளிகளாக, தமிழுக்கு மகுடம் சூட்டியவர்களை அசிங்கப்படுத்தியவர்கள் மீது, உலக தமிழர்கள், கடும் கோபத்தில் உள்ளோம் என்பதை பதிவு செய்துகொள்கிறோம். இவ்வாறு சுரேஷ் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.