> ரத்த வாந்தி எடுக்கும் முஸ்லீம்களின் கப்பில் நீர் குடித்ததற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாக். க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முஸ்லீம் பெண்கள் குடித்த கப்பில் தண்ணீர் குடித்த காரணத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதுடன் அவர் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் வசித்து வருபவர் கிறிஸ்தவரான ஆசிக் மசிஹ். அவரது மனைவி ஆசியா பீபி(50). அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதம் வயலில் வேலை செய்கையில் கிறிஸ்தவரான ஆசியா முஸ்லீம் பெண்கள் குடித்த அதே கப்பில் தண்ணீர் குடித்துள்ளார். அதற்கு வயலில் வேலை பார்த்த முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பெண்கள் மத தலைவரை சந்தித்து ஆசியா பீபி நபிகள் நாயகத்தை அவமதித்துவிட்டார், மத நிந்தனை செய்துவிட்டார் என்று புகார் தெரிவித்தனர். இது குறித்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆசியாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் ரத்த வாந்தி எடுப்பதுடன் சாப்பிடவே கஷ்டப்படுகிறார். இந்நிலை தொடர்ந்தால் அவரை தூக்கிலிடாமலேயே இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
ஆசியாவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அவரது வழக்கறிஞர்கள் கடந்த ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் லாகூர் உயர் நீதிமன்றமோ ஆசியாவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
ஆசியா பீபிக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு கூறி அவரின் கணவர் பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதிபர் அந்த மனுவை ஏற்றுக் கொண்டால் ஆசியா பீபி தூக்கில் இருந்து தப்பிக்க முடியும்.