ஏசுவா உங்களை காப்பாற்றப்போகிறார்? அதிபர் போட்டோவை பூஜையறையில் மாட்டுங்கள்.. சீனாவில் அட்டூழியம்
பீஜிங் : சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதால் சர்ச்சை வெடித்துள்ளது.
சீனாவில் ஒரு கோடி மக்களில் 11 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் என்பது அதிகாரப்பூர்வ தகவல். இதில் கிட்டத்தட்ட 10% கிறிஸ்தவர்கள்.
உலகின் மிகப்பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கும் சீனாவில், இப்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது உலக நாடுகளிடையே அதிலும் கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதசார்பின்மை நாடு
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி நடக்கிறது. இதன்பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை நீக்கிவிட்டு, தங்கள் கட்சியின் மீது மதம் போன்ற ஒரு நம்பிக்கையை மக்கள் வைத்துக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
அதிபர் படம்
எனவே சீனாவில் ஏராளமான கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர்தான் காப்பாராம்
சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் அதிகாரிகள் முதலில் கை வரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர். ஏசு நாதர், மக்களை வறுமையில் இருந்து வெளிக் கொண்டுவரவோ, நோய்களில் இருந்து காப்பாற்றவோ மாட்டார் என்றும், ஆனால் அதை அதிபர் ஜின்பிங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே செய்ய முடியும் என்பதே யதார்த்தம் என்றும் அதிகாரிகள் 'மதமாற்றம்' செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சலுகைகள் ரத்து
ஏசுவின் படத்தை நீக்கி விட்டு அதிபரின் படத்தை மாட்டாவிட்டால் அரசின் சலுகைகளை பெறவோ, வறுமை நிவாரண நிதிகளை பெறவோ வாய்ப்பில்லை என சீனாவிலுள்ள கிறிஸ்தவ மக்களிடம் அதிகாரிகள் கூறி வருவதாக மக்கள் தெரிவிப்பதாக அந்த பத்திரிகை செய்தி மேலும் தெரிவித்துள்ளது.