டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்க சி.ஐ.ஏ. இயக்குநர் கடும் எச்சரிக்கை !
அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பதிவியேற்க உள்ள ட்ரம்புக்கு அந்நாட்டு சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்க சி.ஐ.ஏ.இயக்குநர் ஜான் பிரன்னன், டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கைவிடப் போவதாகவும், அதனை கிழித்து எறியப் போவதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். அவர் அவ்வாறு நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என ஜான் பிரன்னன் கூறியுள்ளார்.
மேலும் புதிதாக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்.
வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ட்ரம்ப்பும், புதிதாக அமையவுள்ள அவரது அரசும் கைவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் புதிய அதிபர் ட்ரம்ப் அறிவாற்றலுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.