காஸா மீது இஸ்ரேல் வெறியாட்டம்.. பிஞ்சு குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பலி!!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் 4வது நாளாக தொடர் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலில் பிஞ்சு குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினரால் 3 இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைகளுக்கு இருதரப்பும் பரஸ்பரம் கண்டனம் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினரிடையே மோதல் வெடித்தது.
அப்பாவிகள் படுகொலை
இந்த மோதல் தற்போது போராக உருவெடுத்து வருகிறது. கடந்த 4 நாட்களாக இஸ்ரேல் போர் விமானங்கள், காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வருகிறது.
800 நிலைகள் மீது தாக்குதல்
கொத்து கொத்தாக, குடும்பம் குடும்பாக இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு அப்பாவி பாலஸ்தீனியர்கள் பலியாகி வருகின்றனர். 4 நாட்களில் ஹமாஸ் இயக்கத்தின் 800 நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அனைத்து வகை வான்வழித் தாக்குதல்
ஆளில்லா போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்து வகையான வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் தொடருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
ஹமாஸ் பதிலடி
இதற்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினரும் முதல் முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை இலக்கு வைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவற்றில் பலவற்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்துவிட்டதாக கூறுகிறது.
போர்வெடிக்கும்
தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் அப்பிராந்தியத்தில் மிகப் பெரிய அளவிலான போர் வெடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.