மொசூல் போர்.. அப்பாவி மக்களை கொன்று குவித்தது கூட்டுப் படைகளும்தான்... ஆம்னெஸ்டி கடும் குற்றச்சாட்டு
மொசூல் நகரை மீட்க நடத்தப்பட்ட போரில் ஐஎஸ் அமைப்பு போன்றே அரசும் அதன் கூட்டுப் படையும் அப்பாவி மக்களை கொன்று குவித்தது என்று ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.
லண்டன்: ஈராக் நாட்டில் மொசூல் நகரை மீட்க நடைபெற்ற போரில் கூட்டுப்படைகள் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்தது மொசூல் நகரம். பல கட்ட தாக்குதலுக்குப் பிறகு மொசூல் நகரம் ஈராக் அரசு படைகளின் வசம் தற்போது வந்துள்ளது.
ஆனால், மொசூல் நகரை மீட்பதற்கு ஐஎஸ் அமைப்புடன் நடத்திய போரில் அமெரிக்காவுடனான ஈராக் அரசின் கூட்டுப் படையும் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது என்று ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது
கொல்லப்பட்ட பொதுமக்கள்
ஐஎஸ் அமைப்பின் ராணுவ இலக்குகளை மட்டும் குறி வைத்து கூட்டுப்படை தாக்குதல் நடத்தவில்லை. இதனால் பொதுமக்கள் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆம்னஸ்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை இல்லாத தாக்குதல்
அரசு படைகள், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கையை விடுக்கவில்லை. போரின் போது பொருத்தமற்ற ஆயுதங்களைத் தேர்வு செய்ததும் அரசுப்படை செய்த தவறாக ஆம்னஸ்டி கூறியுள்ளது. இதனாலும் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்
கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி மொசூலில் உள்ள அல்-ஜடிடா பகுதியில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
ஐஎஸ்ஸின் கொடூரம்
இதே போன்று ஐஎஸ் அமைப்பின் படை நடத்திய கொடூரங்களையும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் பட்டியலிட்டுள்ளது. அதில், மொசூல் பகுதியில் பொதுமக்களைக் கட்டாயமாக ஐஎஸ் அமைப்பு வெளியேற்றியது குறித்து ஆம்னஸ்டி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியேற்றப்பட்ட மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டனர் என்ற பகீர் தகவலை அது வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டுச் சிறை
வீட்டின் நுழைவாயில் முன்பு குழிகளைத் தோண்டி அப்பாவி மக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தடுத்தனர் ஐஎஸ் தீவிரவாதிகள். வீட்டிலேயே சிறை பிடிக்கப்பட்ட பொதுமக்கள் தப்ப முயன்ற போது கொன்று குவிக்கப்பட்டனர் என்பதையும் ஆம்னஸ்டி சுட்டிக் காட்டியுள்ளது.
மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட பொதுமக்கள்
கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் மின் கோபுரங்களில் தொங்கவிடப்பட்டதையும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இன்னும் இது போன்ற பல விஷயங்களை ஆம்னஸ்டி அரசு மற்றும் ஐஎஸ் படைகள் செய்த கொடுமைகளை பட்டியலிட்டுள்ளது.