பின்லேனிடம் தேர்தல் செலவுக்கு பணம் வாங்கினாரா நவாஸ் ஷெரீப்?.. புதிய புத்தகத்தால் பரபரப்பு
இஸ்லாமாபாத்: கடந்த 1990-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அல்-கொய்தா தலைவர் பின்லேடனிடம் நிதியுதவி பெற்றதாக புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ளதன் மூலம் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்.ஐ.-ன் முன்னாள் அதிகாரி காலித் கவாஜா என்பவரின் மனைவி ஷமாமா காலித் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தில் அந்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்து பல விசயங்களைத் தெரிவித்துள்ளார் ஷமாமா.
பின்லேடனிடமிருந்து பணம்...
அதில், ஒன்று தான் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் பின்லேடனிடமிருந்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பணம் பெற்றதாகக் கூறப்படுவது.
1990ம் ஆண்டு தேர்தல்...
கடந்த 1990ம் ஆண்டு தேர்தலின் போது, பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோவிற்கும், நவாஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது, இஸ்லாமியச் சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி பிரச்சாரம் செய்தார் நவாஸ்.
காற்றில் பறந்த வாக்குறுதி...
நவாஸின் இந்த உறுதிமொழியால் கவரப்பட்ட ஒசாமா பின்லேடன், அவருக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் தனது வாக்குறுதியை நவாஸ் மறந்துவிட்டார் என அந்தப் புத்தகத்தில் ஷமாமா குறிப்பிட்டுள்ளார்.
அறிமுகம்...
ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்லேடன் ஈடுபட்டிருந்தபோது அவருடன் காலித் கவாஜாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மூலமாகவே நவாஸுக்கு பின்லேடனுடன் அறிமுகம் ஏற்பட்டதாக அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
கடத்திக் கொலை...
ஷமாமாவின் கணவர் காலித் கவாஜா கடந்த 2010-ம் ஆண்டு, வடக்கு வர்கிஸ்தானில் உள்ள பழங்குடி மாகாணத்தில் பயங்கரவாதிகளால் கடத்திக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.