பின்லேடனை கொல்லும் திட்டத்தை பாக்.கிடம் முன்கூட்டியே கூறாதது ஏன்?: ஹிலாரி விளக்கம்
வாஷிங்டன்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸை மூலம் தகவல் கசிந்து தீவிரவாதிகள் தப்பி விடக் கூடாது என்பதாலேயே, பின்லேடன் மீதான தாக்குதல் திட்டத்தை அந்நாட்டிடம் இருந்து மறைத்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது அல்கொய்தா தீவிரவாத இயக்கம். இத்தாக்குதல்களின் மூளையாக இருந்து செயல் படுத்தியது அந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன்.
சர்வதேச பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்ட பின்லேடனை தேடும் பணியில் ஈடுபட்டது அமெரிக்கா. நீண்ட தேடுதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோத்தாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் பின்லேடன் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
ஆனால், இத்தகைய தாக்குதலை நடத்தப்போவதாக முன்கூட்டியே பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அந்நாட்டு முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியாக ஹிலாரி கிளிண்டன் தற்போது புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
‘ஹார்ட் சாய்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில், தான் பதவியில் இருந்தபோது சந்தித்த முக்கிய நிகழ்வுகளைக் குறித்து விவரித்துள்ளார் ஹிலாரி. அதன்படி, பின்லேடன் கொல்லப் பட்டது குறித்த விளக்கத்தில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது , ‘பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யில் உள்ள சில சக்திகள், அல்கொய்தா தீவிரவாதிகளுடனும், தலீபான் தீவிரவாதிகளுடனும் நல்லுறவைப்பேணி வருவது எங்களுக்குத் தெரியும். இதற்கு முன்பு இத்தகைய தாக்குதல் நடவடிக்கை பற்றிய தகவல்கள் முன்கூட்டி கசிந்து அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த தாக்குதல் நடவடிக்கையும் மிகப்பெரிய நடவடிக்கை. எனவேதான் இதுகுறித்து முன்கூட்டியே பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை'' என இவ்வாறு அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும், பின்லேடன் மீதான தாக்குதல் நடந்த சமயத்தில் தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் ஹிலாரி தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.