இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளிகள் மூடல்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பள்ளிகளுக்கு தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து பள்ளி பேருந்துகளும் பள்ளிகளுக்கு உடனே திரும்பி வரவேண்டும் என்றும், பெற்றோர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் டிஸ்ட்ரிக் என்ற மிகப்பெரிய பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியின் நிர்வாகத்திற்கு இ-மெயில் வந்துள்ளது. அதில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு புலனாய்வு போலீசார் பள்ளியை முற்றுகையிட்டு உஷார்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் சான் பெர்னார்டினோவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது