சர்ச்சைக்குறிய மூலப்பொருளை நீக்க கோகோ கோலா ஒப்புதல்
நியூயார்க்: உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தனது குளிர் பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஆயில்' அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை கோகோ கோலா நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பேண்டா, மவுண்ட் அன்ட் டியூ போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது. இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பதை அறிந்ததால் உலகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆன் லைனில் கோகோ கோலா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து மனுக்கள் குவிந்தன.
இதையடுத்து ‘பிவிஒ'வை நீக்கும் முடிவை கோகோ கோலா எடுத்துள்ளது. இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் இந்த குறிப்பிட்ட ரசாயனத்தின் பயன்பாடு அந்த குளிர்பானங்கள் விற்கப்படும் அனைத்து நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் கோகோ கோலா நிறுவனத்துக்கான செய்தித்தொடர்பாளர் ஜாஷ் கோல்ட் தெரிவித்தார்.
கோகோ கோலாவின் இந்த முடிவு, தனியார் நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த பொருள் கலக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு தடை உள்ளது. கடந்த ஆண்டே பெப்சி நிறுவனம் இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டது நினைவு கூறத்தக்கது.