ஜெர்மனி விமான விபத்து: இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன?- திக் திக் தகவல்
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு கேப்டன் மற்றும் துணை விமானி பேசியவற்றின் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர். விசாரணையில் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்தது.
இந்நிலையில் மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் விமானம் விபதுக்குள்ளாகும் முன்பு நடந்த உரையாடல் பதிவாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு,
கேப்டன் பேட்ரிக்: பார்சிலோனாவில் கழிவறைக்கு செல்ல நேரம் இல்லை. நான் கழிவறைக்கு செல்ல வேண்டும்.
லுபிட்ஸ்: நீங்கள் சென்று வாருங்கள்.
கேப்டன்: விமானம் நல்ல உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. டுசல்டார்ப் நகரில் தரையிறங்க வேண்டும்.
லுபிட்ஸ்: நீ்ங்கள் கழிவறைக்கு சென்று வாருங்கள். விமானத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.
கேப்டனை கழிவறைக்கு செல்லுமாறு லிபிட்ஸ் தான் வலியுறுத்தியுள்ளார். விமானி அறையை விட்டு கேப்டனை வெளியேற்றுவதிலேயே துணை விமானி குறியாக இருந்துள்ளார்.
கேப்டன் கழிவறைக்கு சென்ற பிறகு லுபிட்ஸ் விமானி அறை கதவை பூட்டிவிட்டார். கதவை திறக்குமாறு கேப்டன் மீண்டும் மீண்டும் கூறியும் லுபிட்ஸ் கண்டுகொள்ளவில்லை. கேப்டன் கோடாரியால் கதவை இடித்தும் திறக்க முடியவில்லை.
விமானம் மலையில் மோத சில நொடிகள் இருக்கையில் பயணிகள் அலறியுள்ளனர். ஆனால் லுபிட்ஸோ இறுதி வரை எந்த சப்தமும் போடாமல் அமைதியாக இருந்துள்ளார். லுபிட்ஸுக்கு விமானத்தை இயக்கும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதையும் மீறி அவர் விமானத்தை இயக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.