எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளானதா 76 பேரை காவு கொண்ட கொலம்பியா விமானம்?
அண்மையில் ஏற்பட்ட கொலம்பிய விமான விபத்தில் உள்ளூர் கால்பந்து வீரர்கள் உட்பட 76 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எரிபொருள் இல்லாத காரணத்தால் ஏற்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மெடலின்: பொலிவியாவில் இருந்து பிரேசிலைச் ேசர்ந்த உள்ளூர் கால்பந்து வீரர்களுடன் கொலம்பியாவுக்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து விமானத்தில் எரிபொருள் இல்லாததால் ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பொலிவியாவில்இருந்து திங்கட் கிழமை இரவு 81 பேருடன் பிரிட்டிஷ் சிறிய ரக பயணிகள் விமானம் கொலம்பியாவுக்கு புறப்பபட்டுச்சென்றது. இந்த விமானம் கொலம்பியாவின் மெடலின் அருகே சென்ற போது மலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பிரேசிலின் உள்ளூர் கால்பந்து அணி வீரர்களும் சிக்கினர். இந்த கோர விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விமானத்தின் பைலட் கடைசியாக கட்டுப்பாட்ட அறையுடன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விமானத்தில் போதுமான அளவு எரிபொருள் இல்லை என கூறும் பைலட் விமானத்தை அவசரமாக இறக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் அனுமதி கோருகிறார்.
அப்போது மற்றொரு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டுள்ளதால் 7 நிமிடங்கள் காத்திருக்குமாறு அதிகாரி தெரிவிக்கிறார். அதன்பின் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள் மெடலின் மலைப்பகுதிக்கு மருத்துவப் பொருட்களுடன் மீட்புக்குழுவை அனுப்பி வைத்தனர். மலைப்பகுதி மற்றும் இரவு நேரம் என்பதால் விபத்து நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் ஊடகங்கள் விபத்து நிகழ்ந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். 77 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்த விமானம் 17 ஆண்டுகள் பழமையானதாகும்.