கொலம்பியாவில் புயல்மழையால் நிலச்சரிவு: 254 பேர் பலி... மீட்பு பணிகள் தீவிரம்
கொலம்பியாவின் மகோவா நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு 254 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மகோவா: கொலம்பியாவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி 254 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
கொலம்பியாவின் புட்டமேயோ மாகாணத்தில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர் அங்கும், அதை சுற்றியுள்ள நகரங்களில் சாலைகளில் குப்பை கூளங்களால் சாலைகளே சின்னாபின்னமானது. மேம்பாலங்கள் தரை மட்டமாகின. அங்கிருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதை தொடர்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன. ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை மீட்பதற்காக 1,100 ராணுவ வீரர்களும், போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து இதுவரை 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 200 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் கொலம்பியா அதிபர் ஜூயான் மானுவேல் சான்டோஸ் மீட்புப் பணிகளை காண சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப் பொருள்களை விநியோகம் செய்து வருகின்றன.